இயந்திரப் பொருளாதாரம்
21-ஆம்
நூற்றாண்டின் சூழலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் சக்தியாக ஏ.ஐ. உருவெடுத்து,
உலகளாவியப் பொருளாதாரத்தில் முத்திரை பதிக்கும் இடத்தைப் பெற்றிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளோம். இன்று நாம் வாழ்வது ஏ.ஐ. ஆதிக்கம்
செலுத்தும் நான்காம் தொழிற்புரட்சியின் காலம். முன்பிருந்த உழைப்பின் பொருளாதாரம் முடிந்து, இயந்திர ஆதிக்கப் பொருளாதாரத்தில் வாழ்கிறோம். மனிதன் இயந்திரத்துடனான போட்டியில் தோல்வியடைந்துவிட்டதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே உழைப்பின் பங்கு (wage share) இழப்பும், முதலீட்டு
(capital share) பங்கின் வளர்ச்சி
விகிதமே சான்றாகப் பார்க்கலாம்.
உலக
அளவில் பின்தங்கிய அல்லது முன்னேறிய எந்த நாடாகயிருந்தாலும், ஏ.ஐ. இல்லாத
பொருளாதாரத்தை இன்று கற்பனை செய்ய முடியாது. இது ஏ.ஐ.யினால்
ஈர்க்கப்பட்ட ஒருவகை ஏற்றத்தாழ்வு (inequality) அல்லது அநீதி (injustice) என்று சொல்லும் உலகமாகக் கூட இருக்கலாம். புதிய கண்டுபிடிப்புகள், வேலைப்பளுவைக் குறைத்தல் என்ற குறிகோள்களோடு செயல்படும் இத்தொழிலில் ஒருசில உலக நிறுவனங்களான கூகுள்,
மைக்ரோ சாஃப்ட், ஓபன் ஏ.ஐ. மற்றும்
ஏ.ஐ. டூல்ஸ் என்பவைகளே
ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், டிஜிட்டல் கட்டமைப்பு உள்ள நாடுகளுக்கும், இல்லாத நாடுகளுக்குமான இடைவெளி பெருகிக்கொண்டே போவது ஏ.ஐ.யின்
நன்மைகளை உலகம் சமநிலையில் பகிர்ந்துகொள்ள இயலாமை கவலையளிப்பதாக உலகளாவிய நாணய நிதியம் (IMF) கூறுகிறது.
பொருளாதாரத்தில்
உழைக்கும்
வர்க்கத்தினரின்
இறங்கு
முகம்
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்பிருந்து மிகவும் குறைந்த விலை கணினியின் நாள்கள் முதல், உழைப்பின் வர்க்கம் ஆட்டம் கண்டுவிட்டதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட்ஃபோன், இப்போது ஏ.ஐ., அடுத்து
ரோபோடிக்ஸ் என்பவை இன்னும் வரும் சில பத்து ஆண்டுகளில் எஞ்சியுள்ள வேலைச் சந்தையைப் பெரும்பாலும் அழிவின் எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்று அஞ்சப்படுகிறது.
பொருளாதாரத்தில்
செல்வந்தரின்
ஏறுமுகம்
பலர்
நினைப்பது இலஞ்சம், ஏமாற்று, அரசாங்கத்திடம் பணம், வேண்டியவர்களுக்குப் பதவியும் பணமும் (cronyism) என்பவையே பணக்காரரின் எழுச்சிக்கு மூலகாரணம் என்று. ஆனால், தொழில்நுட்பம்தான் உழைப்பு-முதலீடு (labour and capital balance) சமன்பாட்டு
விகிதத்தை நகர்த்தும் மூலகர்த்தா என்பது வெளியில் தெரிவதில்லை.
மூலதன
மூட்டை (POT - பெரும்
பணக்காரரின் எண்ணிக்கை) நாளுக்குநாள் அதிகரித்து வருவதும் பொருளாதார வளர்ச்சியின் ஓட்டத்தைவிட உழைக்கும் வர்க்கத்தினரின் பங்கு (POT) வேகமாகச்
சுருங்கி வருவதும், இவ்விடைவெளி அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
பொருளாதாரத்தில்
ஏ.ஐ.-யின்
பங்கு
ஏ.ஐ. என்பது கோட்பாடுகளை
ஆய்ந்து, மேம்படுத்தி, வழிமுறைகள் மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்கி நடைமுறைபடுத்தும் ஒரு புதிய தொழில்நுட்ப விஞ்ஞானம். ஏ.ஐ. உதவியினால்
உருவாக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் (products and services) இதுவரை மனிதரால் செய்ததை மாற்றும் நிலையில், உழைக்கும் பிரிவினரில் சிலர் தேவையற்றவர்களாகலாம். இயந்திரங்கள், ரோபோக்கள் மற்றும் ஏ.ஐ.யின்
மறு உருவங்கள் மனிதரின் வேலைகளைப் பல நிலைகளில் செய்யும்
எதிர்பார்ப்பும் இதில் அடங்கும்.
ஏ.ஐ.யின் பயன்பாட்டினால்
புதிய வேலைகள் உருவானாலும், ‘எவ்விதத்தில் இழந்த வேலைகள் சரிகட்டப்படும்?’ என்ற கேள்வியும் உள்ளது.
குறைந்த
கைத்திறன் (low skilled) கொண்ட வேலைகளைத்
தொழில்நுட்ப ஊடுருவலால் இப்பிரிவினர் வேலை இழப்பதும், மறுபுறம் பொறியியல், மருத்துவம், நீதித்துறை சார்ந்தோர் தொழில்நுட்பப் பயன்பாட்டினால் அதிக ஊதியம் பெறுவதும் தவிர்க்க முடியாமலிருப்பது ஏ.ஐ.யினால்
உருவாகும் இடைவெளியாகப் பார்க்கப்படுகிறது. முன்பு கண்ட தொழிற்புரட்சி ஒரு வேலைக்கு மற்றொரு வேலையைக் கொடுத்தது. இன்று பணித்தளங்களில் நாம் காணும் ஏ.ஐ. தொழில்புரட்சியின்
வளர்ச்சி வேலையைப் பறித்துவிடுமோ என்ற நிலையில், நிறுவனங்களுக்கு அதிக இலாபம் ஈட்டும் கருவியாகவும், செல்வம் சேர்க்கும் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது.
சமுதாயமும் ஏ.ஐ.யும்
ஏ.ஐ.-யினால் தனிமனிதனுக்கும்
நிறுவனத்திற்கும் சமுதாயத்திற்கும் நன்மைகள் கிடைப்பது என்றிருக்க, பணக்காரர்-ஏழை இரு வர்க்கத்தினரிடையே உள்ள இடைவெளி அதிகமாகிறதென்ற பார்வையும் உள்ளது. சிலர் வேலைப்பறிப்பு குறிப்பாக, குறைந்த கைத்திறன் உடையோர் வேலையிழப்பு, இதனால் உருவாகும் வறுமையை எதிர்கொள்வது ஒருபுறம்; அதே நேரத்தில், ஏ.ஐ. புதிய
உயர்தர வேலைகளை உருவாக்குவது, திறன் படைத்தோருக்குத் திணறடிக்கும் சம்பளம், பெரிய நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்
மூலம் உயர்தர, குறைந்த விலையில் சேவைகளைப் பயனர்களுக்கு அளித்தல் மற்றொரு புறம்.
இத்தொழில்நுட்பத்தை
எட்டிப்பிடிக்க இயலாத சிறு நிறுவனங்கள் பாரம்பரிய தயாரிப்பின் மூலம் தரத்திலும் விலையிலும் நடைமுறை போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறிது சிறிதாகத் தொழிலில் தோற்கும் நிலை என்பவைகளெல்லாம் ஏ.ஐ. நேரடியாகவோ
மறைமுகமாகவோ இன்றைய பொருளாதாரத்தில், ஏழை-பணக்காரர் இடைவெளியில் முக்கியப் பங்கு வகிப்பதைக் காட்டுகிறது.
சின்னப்பனுக்கு இன்று முதல் நாள் வேலை. இந்த வேலையைப் பெறுவதற்குப் பலரின் சிபாரிசு அவனுக்குத் தேவைப்பட்டது. ஒருவழியாக, பல போட்டிப் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த வேலை கிடைத்தது.
காலையிலேயே
பரபரப்பானது அவனது உலகம். சின்னப்பன் இயல்பாகவே எல்லா வேலையும் செய்வான். ஆனால் என்னவோ, எந்த வேலையும் அவனுக்கு நிரந்தரமாக அமையவில்லை. தன் மனைவி மற்றும் தன் ஒரே மகளோடு வேளாங்கண்ணி ஊர் பக்கத்திலேயே வாழ்ந்து வந்தான். வேலைக்குக் கிளம்பும்போது தன் முடியை ரிப்பனால் பின்னியபடியே சின்னப்பனின் பத்து வயது மகள் கேட்டாள்: “அப்பா, அப்படி என்ன வேலைக்குத்தான் போற? சொல்லிட்டுப் போயேன். வரும்போது மறக்காம மைசூர் பாக்கு வாங்கிட்டு வாப்பா... சரியா?” சின்னப்பன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தன் மகளுக்கு முத்தம் ஒன்றை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
நாகப்பட்டினம்
பேருந்து நிறுத்த கழிவறை பராமரிப்புப்பணி அது. ஆண்-பெண் கழிவறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். அதில் கிடைக்கும் பணத்தில் நாற்பது விழுக்காட்டை ஊதியமாக வைத்துக்கொள்ளலாம். மீதமுள்ள அறுபது விழுக்காடு பணத்தை நகராட்சியிடமிருந்து கழிப்பறை பராமரிப்புக் குத்தகைக்கு எடுத்திருந்த குமாரிடம் கொடுக்கவேண்டும் என்ற ‘டீலுக்கு’
சரி சொல்லியிருந்தான் சின்னப்பன்.
நாற்றம்
அவன் குடலைப் புரட்டிப்போட்டது. டவலைத் தன் முகத்தோடு இறுக்கமாகக் கட்டிக் கொண்டு தண்ணீரை ஊற்றிச் சுத்தம் செய்தான். துண்டு பீடிகள், மென்று துப்பப்பட்டிருந்த சுவிங்கங்கள், உப்புக்கறை படிந்த நீர்ப்பாதை, பளுப்பு நிறமேறிய சிறுநீரேந்திகள், துருப்பிடிந்திருந்த நீர்வழிக்குழாய்கள் எல்லாவற்றையும் முடிந்தவரை சுத்தம் செய்தான். வேலைப்பளுவில் உடைந்து விழுந்த விளக்குமாறு குச்சிகள் ‘என்னை விட்டுவிடு’ என்று
சொல்வது போல, கழிவறைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோதே பலர் கழிப்பிடங்களைப் பயன்படுத்திவிட்டுச் சென்றது இன்னும் வேலைப்பளுவைக் கூட்டியது.
ஏதோ
ஒருவழியாக ஆண்-பெண் கழிவறைகளைச் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவினான். ஓரளவிற்குப் பரவாயில்லை போலிருந்தது அவனுக்கு. பிளாஸ்டிக் பையில் வைத்து, தான் கொண்டு வந்திருந்த சட்டை வேட்டியை மாட்டிக்கொண்டான். முடி சீவி தன்னைச் சிங்காரித்துக்கொண்டான். ஒரு முதலாளியைப்போல கழிப்பறைக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த நாற்காலி மேசையில் வந்து அமர்ந்து கொண்டான். அது அவனுக்கு ஒருவிதப் பெருமையைக் கொடுத்தது. கழிவறை முன்பாக நாற்காலி மேசை போடப்பட்டிருந்தாலும் முதலாளி வேடம் அவனுக்கு கழிப்பிட வாடையைக் கடந்த ஒரு போதையை உருவாக்கியிருந்தது.
கழிவறைக்கு
வருவோர், போவோரிடம் ஒன்றுக்குப் போகவேண்டுமென்றால் ரூபாய் பத்து, இரண்டுக்கு என்றால் ரூபாய் பதினைந்து என்று கறாராக வாங்கிக்கொண்டான். ‘கக்கூசுக்குக் கொடுக்குற காசுல டீ, வடை சாப்பிட்டிடலாம் போல’ என்று கோபப்பேச்சுப் பேசுவோரும் உண்டு.
சின்னப்பன்
காசைத் தவிர வேறு எதையும் காதில் வாங்கிக்கொண்டதில்லை. வீட்டிற்குப் போவதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை கழிப்பறையைச் சுத்தம்செய்துவிட்டு தானும் குளித்துச் சுத்தம் செய்துகொண்டான்.
கிடைத்த
வருவாயில் தன் மகளுக்கு நாகப்பட்டினம் பேருந்து நிறுத்தப் பேக்கரியில் மைசூர் பாக்கு வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். ‘அப்பா
இன்னைக்குச் சீக்கிரம் வந்திட்டாரு’ என்று
தன்னைப் பார்த்து ஓடிவந்த மகளை வாரி அணைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருந்த மைகூர் பாக்கு மிட்டாயைக் கொடுக்க நினைத்த போது, “அப்பா உம்மேல மூத்திர வாடை” என்று கூறிக்கொண்டு அப்பாவின் பிடியிலிருந்து விலகியோடினாள் மகள். கீழே விழுந்து இரண்டாக உடைந்தது மைசூர் பாக்கு மட்டுமல்ல, சின்னப்பனுடைய சின்ன இதயமும்தான். கழிப்பறைச் சுத்தம் செய்யும்போது, கழிவறைக்கு முன்னால் உள்ள மேசையில் அமர்ந்திருக்கும்போது உணராத சிறுமையைத் தன் மகள் வெளிப்படுத்திய அருவறுப்பில் உணர்ந்தான் சின்னப்பன்.
சின்னப்பனைப்
போல இன்று தொழிலாளர் வர்க்கம் பலவிதங்களில் சிறுமைப்படுத்தப்படுவதும் சுரண்டப்படுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, மாறிவரும் டிஜிட்டல் உலகிலே புதிய தொழிலாளர் வர்க்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை நாம் ‘டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம்’
(Digital Proletariat) என்று
கூறலாம். இன்று கொஞ்சம் ‘கம்யூனிசம்’ பேசுவோமா?
யார்
இந்த டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம்? டிஜிட்டல் முதலாளித்துவத்தின் கையிலிருக்கின்ற இணையமும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இயங்குவதற்குத் தங்களின் நேரம், கவனம், உழைப்பு மற்றும் தரவுகளை (Data) வழங்கும்
டிஜிட்டல் உழைப்பாளர்களைக் குறிக்கும் ஒரு புதிய சொல்லாடல்தான் ‘டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம்’
ஆகும்.
தொழில்துறை
முதலாளித்துவத்தில் (Industrial Capitalism) தொழிலாளர்கள்
தங்கள் உடல் உழைப்பால் முதலாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மூலப்பொருள்களைப் (Raw Resources) பயன்படுப் பொருள்களாக (Commodities) மாற்றினர்.
எனினும், அத்தொழிலாளர்கள் அவர்களின் உழைப்பிற்கான ஊதியம் கிடைக்காமல் சுரண்டப்பட்டனர்.
இன்றைய
காலத்தில் உருவாகியிருக்கும் டிஜிட்டல் முதலாளித்துவத்தில் (Digital Capitalism) இலாபமும்
மதிப்பும் பொருள்களை உருவாக்குவதில் அல்ல; மாறாக, இணையவழி கலந்துரையாடலினாலும், சமூக ஊடகத் தொடர்புகளினாலும் விளைகிறது. ‘ஸ்க்ரோல்’
செய்வது, ‘லைக்’ போடுவது, ‘கருத்து எழுதுவது’
போன்ற ஒவ்வொரு சிறிய செயலும் கூட ஒரு சிறு உழைப்பாக மாறி, டிஜிட்டல் நிறுவனங்களுக்குத் தரவாக மாற்றப்படுகிறது. இதில் கொள்ளை இலாபம் ஈட்டுபவர்கள் ‘டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கத்தினர் அல்ல; மாறாக, பெரும் டிஜிட்டல் முதலாளிகளே.
இதில்
பெரும் கொடுமை என்னவென்றால், தொழில்துறை முதலாளித்துவம் போலல்லாமல் டிஜிட்டல் முதலாளித்துவத்தில் டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கத்தினரே தொழிலாளர்களாகவும் மூலப்பொருள்களாகவும் உள்ளனர். சமூக ஊடகத்தில் அல்லது இணையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லது பதிவிடும் ஒவ்வொரு பதிவும் டிஜிட்டல் முதலாளிகளுக்கு நாம் வழங்கும் சேவையே.
பொருளாதாரத்தையும்,
மனிதர்களின் எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் டிஜிட்டல் முதலாளிகளின் மாய வலையாகிய அல்காரிதங்களுக்குள் (algorithm) நாம் சிறைப்பட்டுக்கிடக்கிறோம். நமக்குத் தெரியாமலேயே நம் உணர்வுகள், செயல்கள் மற்றும் அடையாளங்கள் அனைத்தும் தரவாகப் பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் வணிகப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. மார்க்ஸ், தொழிலாளர் வர்க்கம் (Proletariat) என்பதை
உயிர் வாழ்வதற்காகத் தன் உழைப்பை விற்கவேண்டிய சமூகமாக வரையறுத்தார். டிஜிட்டல் காலத்திலும் இந்த வரையறை இன்னும் பொருந்துகிறது. ஆனால், உழைப்பின் வடிவங்கள் மாறியிருக்கின்றன. முன்புபோல் கார்கள் அல்லது துணிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, இன்றைய தொழிலாளர்கள் தரவுத்தொகுப்புகளைப் பலவடிவங்களில் (Dataset) உருவாக்குகின்றனர்.
நாம்
இன்று புதிதாகப் பெரும் முதலாளிகளின் சுரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்ட ‘டிஜிட்டல் தொழிலாளர் வர்க்கம்’
(Digital Proletariat) என்னும்
உண்மையை உணரும்போதுதான், நாம் டிஜிட்டல் முதலாளித்துவத்தை எதிர்க்கின்ற ‘டிஜிட்டல் கம்யூனிஸ்டுகள்’ என்ற
உணர்வை உருவாக்கிக் கொள்ளவேண்டிய அவசியம் நமக்குப் புரியும்.
தனிமனித அரசியல் பங்கேற்பே குடியாட்சித் தத்துவம். தேசத்தின் குடிமக்களுக்குப் பாலின, இன, மத, மொழி, தொழில் எனப் பாகுபாடுகள் இல்லை. நடிகை, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்; அதற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அடிப்படை அரசியல் அறிவு உள்ளதா? நடிகை, நடிகர்கள் அரசியலுக்கான அடிப்படைத் தகுதிகளைக் கொண்டுள்ளார்களா என்பதே கேள்வி.
ஓட்டு
அரசியல் என்பதே எண்ணியல் சார்ந்த கணக்கீடு. தமிழ்நாட்டுத் தேர்தல் கள வெற்றி என்பது
கூட்டணி அரசியல்வழி பெறுவது. சில வேளைகளில் மூன்றாவது,
நான்காவது என அணி அமைத்து
வெற்றி அடைவது. மாற்று அணியைத் தோல்வி அடையச் செய்வது. 2016 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்தது. வரலாறு திரும்பும் என்பது கோட்பாடு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், பா.ச.க.
மூன்றாவது, நான்காவது அணி வழி ஆட்சி மாற்றத்திற்கு அடிபோடுகிறது. நான்காவது அணிக்குத் தேர்தல் என்பது வெற்றி அல்ல; பயிற்சி என்பதாகும். மூன்றாவது அணியான நடிகர் விஜய் அவர்களைப் பற்றி உற்றுநோக்குவோம்.
நடிகர்
விஜய் விக்கிரவாண்டியில் தன் கட்சி கொள்கை அறிவிப்பில் பா.ச.க.வைத் தன் கொள்கை எதிரி எனப் பிரகடனம் செய்தார். அதன்பின் நீட், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் என்பதில் ஒன்றிய அரசை எதிர்த்து பா.ச.க.
என்ற வார்த்தையைக் கூறாமல் கேள்வி தொடுத்தார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ‘நடிகர் விஜய் ஏன் பா.ச.க.
பற்றிப் பேசுவதில்லை?’
என்ற கேள்விக்கு சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் “சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது தமிழ்நாட்டு ஆளுங்கட்சியைத்தான் பேசவேண்டும், பா.ச.க.வைப் பற்றிப் பேசத் தேவையில்லை” என்று
பதில் தந்துள்ளார்.
ஆம்,
சரியான வாதம்தான். நடிகர் விஜய் தமிழ்நாட்டு அரசிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய
அரசைக் கண்டித்தாரா? ஆளுநர் பதவி
என்பது வேண்டாத பதவி எனக் கூறிவிட்டு, ஆளும் அரசைக் குறை கூறி, த.வெ.க.
ஆளுநரைச் சந்தித்ததே! அது எதில் சேர்த்தி? தமிழ்நாடு ஆளுநர், ஆளும் தி.மு.க.
அரசு மீது தரும் நெருக்குதலைக் கண்டித்தாரா? ஏன் பா.ச.க.
என்றால் விஜய் பயப்படுகிறார்?
தமிழ்நாடு
தேர்தல் பொறுப்பாளராக சென்னை வந்த பியூஸ் கோயல் பா.ச.க.
நிர்வாகிகளுக்கு, “த.வெ.க.வை விமர்சிக்க வேண்டாம்” என
அறிவுரை கூறுகிறார். பா.ச.க.
முன்னணித் தலைவரான தமிழிசை சௌந்திரராஜன் அவர்களோ, வாரம் ஒரு முறை த.வெ.க.
தமிழக என்.டி.ஏ. கூட்டணிக்கு
வர வேண்டும் என மென்மை காட்டுகிறார்.
பொதுவெளியில் கூட்டணி அழைப்புவிடுக்கிறார். மதவாத பா.ச.க.
சிறுபான்மை மக்களின் வாக்குகளை விஜய் வழியாகப் பிரிக்கப் போட்ட ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் இவ்வாறு நடைமுறையானது.
பா.ச.க. திட்டமிட்டு
வருமான வரி வழக்குகளில் நடிகர் விஜய் அவர்களைச் சிக்க வைத்துள்ளது. ‘மாஸ்டர்’ மற்றும் ‘பிகில்’ திரைப்படத் தயாரிப்பாளர்கள் மதுரை அன்புச்செழியன், லலித் குமார் வீடுகளில் நடந்த வருமான வரிச் சோதனையில் முழு கறுப்புப் பண விவகாரமும் பிடிபட்டது.
‘புலி’ படத்திற்குப்
பெற்ற பணம் 15 கோடிக்கு வருமான வரி 1.5 கோடி கட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இதைவிட 2012-இல் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி கட்டவில்லை. தான் ஒரு பிரபல நடிகர் என்பதை மறைத்து வரி விலக்கு வேண்டுகிறார். இவ்வளவு ஆண்டுகளாக வழக்கு நடந்து தீர்ப்பளித்த நீதிபதி கூறுகிறார்: “விஜய் தன் இரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்; அவர் வரி செலுத்த மறுப்பது ஏற்புடையது அல்ல; அவர் வரியைச் சரியாகச் செலுத்தவேண்டும். வரி விதிப்பு முறை என்பது நாட்டின் முதுகெலும்பு. வரி வருவாயைக் கொண்டுதான்
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள் என மக்கள் நலத்திட்டங்கள்
நடக்கின்றன.” இதைத்தான்
ஊழலை ஒழிக்க வந்த நடிகர் விஜய்யின் அடிப்படை அரசியல் நேர்மை, அறம் எனலாம். வருமான வரி வழக்குகள், கரூர் பெருந் துயர வழக்கு எனத் த.வெ.க.வைப் பா.ச.க.
மடக்கிவிட்டது.
விஜய்
‘பாசிசம்’, ‘பாயாசம்’ எனப்
பேசிவிட்டு பாசிசத்தின் அடிப்படையான ‘ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை மூளைச் சலவை செய்’ என்ற ஹிட்லரின் அமைச்சரான ஜோசப் கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டு மக்களைத் திசை திருப்புவது அடிப்படை அரசியல் பண்பற்ற செயலாகும். த.வெ.க.வினர் அடிப்படை ஆதாரமற்ற பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற கூட்டம் என சேலம் த.வெ.க. கூட்டத்தை
ஒரு பிரபல தொலைக்காட்சி
வருணித்தது.
விஜய்
இரசிகர்கள் அரசியல் புரிதலற்ற மன நிலையில் இருக்கிறார்கள். நடிகர் விஜய் கூட ‘நான் வலதும் இல்லை, இடதும் இல்லை’ என நேர்காணல் கொடுத்ததாக
நேர்காணல் எடுத்தவர், நேர்காணல் கொடுத்திருந்தார். தலைவருக்கே அடிப்படை அரசியல் புரிதல் இல்லை; தொண்டர்களும் தங்கள் தலைவர் விஜய் வழியில் ‘பஞ்ச்’ டயலாக் பேசுவது, சவால் விடுவது எனச்
சமூக ஊடகங்களில் போக்குக் காட்டுகிறார்கள். அனைத்திற்கும் உச்சமாக, கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் செய்யும் அடாவடிகள், புளுகு
மூட்டைகள் இதுவரை தமிழ்நாடு தேர்தல் களம் காணாத அவலமாகும். இதில் கொதித்துப் போன தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்: “மூத்த அரசியல் தலைவர்களை நடிகர் விஜய் நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது. விஜய் உடனடியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர் விஜய்.”
ஆம்,
சரிதான். 33 வருட சினிமா வாழ்வில் நடிகர் விஜய் மூன்று முறை அரசுப் பொதுத்தேர்வுகளில் முதலிட மாணவர்களுக்குப் பரிசு வழங்கியது, ஈழ தமிழர் நிதிக்குப்
பெருந்தன்மையாக ரூ.
500 வழங்கியது, ‘நீட்’ தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த அனிதா வீட்டிற்குச் சென்றது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வேடிக்கை பார்க்கச் சென்றது, டெல்லியில் இராகுல்காந்தியைச் சந்தித்தது, கோவையில் மோடியைச் சந்தித்தது... என விஜய் பொதுவெளிக்கு வந்த நிகழ்வுகள் சொற்பம் என்பதே நிஜம்.
நடிகர்
விஜய் அவர்களுக்கு மோடியைச் சந்தித்த போதே வருமான வரிப் பிரச்சினைகள் ஆரம்பமாகிவிட்டன. அந்த விஜய்தான் ஊழலை ஒழிப்பார் என நம்புகிறார்கள்.
த.வெ.க.வின்
கள எதார்த்தம் மக்கள் சேவை, நடப்பு அரசியல் துறந்த கனவுலகு, கற்பனை அரசியல். உண்மைகளை உணர மறுக்கிற தலைமையைக் கொண்ட, இரசிக மனப்பான்மை கொண்ட மாய பிம்ப அரசியல். நாம் கவனித்து இருப்போம்: சிறு குழந்தைகள் கடற்கரை மணலில் கோட்டைக் கட்டி விளையாடும். அதுபோல, மணல் கோட்டையில் தன்னை முதல்வராகக் கருதி இன்றும் வாழ்கிற விஜய் என்கிறவரின் மனப்பிறழ்வு ‘ஆயிரமாயிரம் தமிழ்நாட்டு இளைஞர்களை நாசம் செய்கிறதே’
என்பதே நம் கவலை!
அண்மைக்காலங்களில் இந்தியத் தேர்தல்கள் அனைத்தும் சனநாயகத்திற்கு வாழ்வா, சாவா? என்ற போராட்டமாகவே இருக்கிறது. மதத் தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பாசிசவாதிகள், சனாதன, இந்துத்துவச் சித்தாந்தங்களுக்குக் கொடி பிடிப்போர், மதவாத அரசியல்வாதிகள், சிறுபான்மையினர், தலித், பழங்குடியினரின் எதிரிகள், பன்மைத்துவத்தை மதிக்காதவர், இந்திய அரசமைப்புச் சாசனத்தைச் சிறுமைப்படுத்தி ஓரங்கட்டத் துடிப்பவர் போன்றோர் ஆட்சிப் பொறுப்பை விடாது பற்றிக்கொள்ள எண்ணுகின்றனர்.
இந்தத்
தேசிய நெருக்கடி நேரத்தில் தமிழ்நாட்டிலே அரசியல் விழிப்புணர்வை, பொறுப்புணர்வை, உரிமைகளை உசுப்பிவிடுவது காலத்தின் கட்டாயம் என உணர்கின்றோம். எல்லா
இடங்களிலும் அரசமைப்புச் சாசனம் குறித்த விழிப்புணர்வைத் தட்டி எழுப்பி சனநாயகம், சுதந்திரம், நீதி, சகோதரத்துவம், சமத்துவம், பன்மைத்துவம், சமயச் சார்பற்றத் தன்மை போன்றவற்றை மதித்திடும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்த விழைகிறோம். சுதந்திரத்தை, சனநாயத்தை மறுபடியும் தமிழ்நாட்டில் உறுதி செய்வதற்கு நமது அரசியல் கள ஈடுபாடு காலத்திற்கேற்ற
நற்செய்திப் பணி என உணர்கிறோம்.
கிறித்தவ ஆன்மிகமும்
அரசியல்
ஈடுபாடும்
இரு
வேறு
துருவங்களா?
காலங்காலமாக
ஆன்மிகத்தையும் அரசியல் ஈடுபாட்டையும் கிறித்தவத்தில் இரு எதிர் துருவங்களாகப் பார்த்து, அரசியல் ஈடுபாட்டில் ஒதுங்கிப் பின்தங்கியுள்ள கிறித்தவர்களின் எதார்த்தத்தையும் கண்டுகொண்டோம். அரசியலை ஓரங்கட்டி இன்னும் வாழ்ந்தால் கிறித்தவராகிய நாமும் ஒரேயடியாக இந்தியாவில் ஓரங்கட்டப்படுவோம். ஆர்.எஸ்.எஸ்.சால் இயக்கப்படும் பா.ச.க.
ஒன்றிய அரசால் கிறித்தவரும் சிறுபான்மையினரும் கடந்த 12 ஆண்டுகளாக மிகவும் ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்பதை அறிவோம். இந்நிலை நீடித்தால் நமது கிறித்தவ இருப்பே இந்தியாவில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்படும் என்பதில் ஐயமில்லை என்பதைக் கீழ்க்காணும் புள்ளி விவரம் காட்டுகின்றது.
இந்தியாவில் கேள்விக்கும்
வன்முறைக்கும்
உள்ளாக்கப்படும்
கிறித்தவர்
கடந்த
2024-லில் இருந்து 2025 வரை இந்தியாவில் கிறித்தவருக்கு எதிரான 4,956 வன்முறைத் தாக்குதல்கள் ஒன்றிய அரசின் மறைமுகமான, நேரடியான ஆதரவோடு மதவாதக் கும்பல்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
ஒன்றிணைந்த கிறித்தவ அமைப்பு (United Christian Forum) இவற்றைத்
தொடர்ந்து பதிவு செய்து ஆவணப்படுத்தி வருகின்றது.
செப
வழிபாடுகளைத் தடுப்பது, அதில் ஈடுபடுவோரை வன்முறையால் தாக்குவது, திருவிவிலியங்களை எரிப்பது, கிழிப்பது, கிறித்தவ அடையாளங்களாகிய சுரூபங்களை உடைப்பது, நற்கருணைப் பேழையை அவமதிப்பது, கோவில்களை இடிப்பது, கல்லறைகளைத் தகர்ப்பது, கல்வி-நலவாழ்வு-சமூக நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இடையூறு தருவது, மறைப்பணியாளர்களை வன்முறை வசைபாடலால், செயல்களால் தாக்குவது, மலம்-மாட்டுச் சாணியைச் சாப்பிட வைப்பது, மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வைப்பது, கிறித்தவ வீடுகளை இடிப்பது, எரிப்பது, மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டு அநியாயமாகக் கைது செய்து, பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைப்பது, ‘தாய் மதத்திற்குத் திரும்பி வாருங்கள்’
(கர் வாப்சி) என்று பழங்குடியினக் கிறித்தவர்களைக் கத்தி-துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு மாற்றுவது... என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கந்தமால் (2008), மணிப்பூரில் (2023-2026) நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களே இதற்குச் சாட்சி.
அக்கறையற்று வாழ்ந்தால்
அடிச்சுவடு
இல்லாமல்
அடக்கப்படுவோம்
இவை
எல்லாம் எதேச்சையாக நடக்கின்றன என்று நம்பினால் நம்மைப்போல முட்டாள்கள் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், சனாதனக் குழுக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் இவை. இவற்றை
எல்லாம் கண்டும் காணாமல், அக்கறையற்று வாழ்ந்தோம் என்றால் அதன் கொடூர விளைவுகளை இன்னும் அதிகமாக அனுபவிப்போம். இந்தியக் குடிமக்கள் என்ற அடிப்படை உரிமையே பறிபோய்விடும்.
மௌனம்
அநீதிக்குத் துணை போவதன் அடையாளமாகும். அக்கறையற்று ஒதுங்கி ‘நான்’,
‘எனது குடும்பம்’,
‘எனது சபை’,
‘எனது பங்கு’,
‘எனது மறைமாவட்டம்’ என்று
சுயநலத்தோடு குறுகிய பார்வையோடு வாழ்ந்தால் நடந்திடும் சமூகப் பாவத்திற்கு நாமும் உடந்தையாகி விடுவோம். துன்புறும் இலாசரைக் கண்டும் ஒதுங்கி வாழ்ந்த செல்வந்தர் பெறும் தண்டனை (லூக் 16:19-31), கிடைத்த விளைச்சலை எல்லாம் தான் மட்டும் அனுபவிக்க முயன்ற அறிவிலியான செல்வந்தர் பெறுகின்ற தீர்ப்பையும் (லூக் 12:13-21) அக்கறையற்று ஒதுங்கி சுய நலத்தோடு வாழும் கிறித்தவர் பெறுவர் என்பதில் இயேசு தெளிவாக இருக்கின்றார்.
அரசியல் ஈடுபாடு
என்றால்
என்ன?
அரசியல்
ஈடுபாடு என்றால், வெறும் அரசியல் கட்சிகளின் ஈடுபாடு என்ற குறுகிய பார்வையிலிருந்து விடுபட்டு, அரசியலை விசாலமான பார்வையில் பார்த்திடல் வேண்டும். அரசியலுக்குப் பல வரையறைகள் கொடுக்கப்பட்டாலும்,
அரசியல் என்பதைச் ‘சக்தி’
(politics is power) எனப் பார்ப்பது
மிகவும் முக்கியமானது. ஒருவரோ, ஒரு குழுவோ தனது வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்கும் தீர்மானிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் பெற்றுள்ள ஆற்றலே சக்தி எனப் பரவலாக இன்று பொருள் கொள்ளப்படுகின்றது.
இச்சக்தி
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கடவுளின் கொடையாகும். இந்தச் சக்தியைப் பிறர் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளும்போது, நாம் சக்தி பறிக்கப்பட்டவர்களாக மாற்றப்படுகின்றோம். இச்சூழலில் பிறர் நமது வாழ்வைத் தீர்மானிக்க, செயல்படுத்த நாம் சக்தி அற்றவர்களா கின்றோம். அரசியலை நாம் சக்தியாகப் பார்ப்பதால், சக்தி பறிக்கப்பட்ட மக்களைச் சக்தி படைத்தவராக மாற்றுவதுதான் உண்மையான அரசியலாகும். கிறித்தவர்களாகிய நம்மையும் பிற குடிமக்களையும் சக்திப்படுத்துவதுதான் அரசியல் ஈடுபாட்டின் அரிச்சுவடியாகும்.
அரசியல் சக்திப்படுத்திய
இயேசு
இயேசு
தம்முடைய சமுதாயத்திலே சக்தி பறிக்கப்பட்ட ஏழைகள், நோயாளிகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், பெண்கள், வரி தண்டுவோர், வேசிகள், சமாரியர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் போன்றோரின் மனித மாண்பைத் தூக்கிப்பிடித்து, அவர்களையும் சக்திப் படைத்தவராக்கும் இறையாட்சிப் பணியில் முழுமூச்சுடன் செயல்பட்டார். எல்லாரும் அரசியல் சக்தி பெற்று, தங்களது வாழ்வைத் தேர்ந்தெடுத்து தீர்மானித்து, செயல்படுத்தும் கடவுளின் பிள்ளைகளாக இறையாட்சி சமுதாயத்திலே வாழவேண்டும் எனப் பாடுபட்டார்.
இன்று
அரசியல் ஈடுபாட்டின் வழியாகத் தெய்வத்திற்கும் தேசத்திற்கும் உழைக்க ஒவ்வொரு கிறித்தவரும் அழைக்கப்படுகின்றோம். அரசியல் ஈடுபாட்டின் வழியாக இந்திய அரசமைப்புச் சாசனத்தில் மிளிரும் இறையாட்சி விழுமியங்களான நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், அன்பு, தோழமை, பகிர்தல் போன்றவற்றைப் பாதுகாத்திடுவதும் வளர்த்திடுவதும் கிறித்தவரின் கடமையாகும்; இறையாட்சிப் பணியும் ஆகும். அனைவரையும் அரசியல் சக்திப்படுத்துவது இறையாட்சிப் பணியின் இன்றியமையாதக் கூறாகும்.
கிறித்தவ அரசியல்
ஈடுபாடு
இன்றைய
வரலாற்றுக்
கட்டாயம்
அரசியல்
ஈடுபாட்டை இறையாட்சிப் பணியிலிருந்து அந்நியப்படுத்திப் பிரித்துப் பார்த்து, இன்னும் கிறித்தவர் விலகி இருப்பதும், அக்கறையின்றி இருப்பதும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கிறித்தவ ஆன்மிகத்திற்கு உகந்ததல்ல. இந்தியச் சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ கிறித்தவர்கள் தியாகத்தோடு செயல்பட்டிருப்பதை நாம் மறக்க முடியாது, மறக்கக் கூடாது.
இன்றும்
திரு அவையிலே ஆங்காங்கே சில பொதுநிலையினரும் அருள்பணியாளர்களும் துறவறத்தாரும் அரசியல் ஈடுபாட்டோடு செயல்பட்டாலும், ஒட்டுமொத்தமாகக் கிறித்தவச் சமுதாயம் எல்லாரையும் சக்தியுடையவர்களாக்கும் அரசியல் ஈடுபாட்டில் களம் இறங்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்துவிட்டது. கிறித்தவருக்கு
அரசியல் ஈடுபாடு தேவை என்பதை வலியுறுத்திய மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார்: “கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு என்பது பொதுநலனுக்காக நாம் எடுத்திடும் ஓர் அறநெறிக் கடமையாகும்.” தனிப்பட்ட நம்பிக்கை எனும் தளத்தில் இருந்து, சமுதாய மாற்றம் எனும் தளத்திற்கு நாம் நகரவேண்டும். நீதியை நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு தந்திடவும் சமுதாயத்தைப் பிரிவினைப்படுத்திடும் (Polarization) சக்திகளிடமிருந்து
மீட்டிடவும் ‘அரசியல் அன்பு’ (Political Love) வேண்டும். அரசியல் ஈடுபாடு என்பது அதிகாரத்திற்கான போட்டி அல்ல; மாறாக அரசியல் அன்பிற்கான உன்னத அழைப்பு.”
சக்திப்படுத்தும்
அரசியல் விழிப்புணர்வு கிறித்தவரிடையே போர்க்கால நடவடிக்கையிலே முடுக்கி விடப்படவேண்டும். அரசியல் சக்தியைப் பெற்றுச் செயல்படும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும், கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகளாகவும், நகரமன்ற உறுப்பினர்களாகவும், வார்டு கவுன்சிலராகவும், ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற ஆட்சித் துறையாளராகவும் கிறித்தவர்கள் களமிறங்கவேண்டும். ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினரோடு சேர்ந்து அரசியல் ஈடுபாட்டை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
வெறுமனே
சிறுபான்மையினர் நலம் காப்பவராக மட்டுமல்லாது இறையாட்சி, இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களை இன்றைய சமுதாயத்திலே வளர்த்தெடுப்பவராக, பாதுகாப்பவராக, செயல்படுத்துபவராகக் கிறித்தவ அரசியல் ஈடுபாடு மலரவேண்டும். வெறும் செபம், மெழுகுதிரி ஊர்வலம், உபவாசம், வெற்று அறிக்கைகள் என்று நின்றுவிடாமல், அரசியல் களம் காணும் கிறித்தவராக எழுச்சி பெறுவோம்.
இறையாட்சி
மலர்ந்திட, இந்திய அரசமைப்புச் சாசனம் காத்திடும் அரசியல் ஈடுபாடு கொண்டதாகக் கிறித்தவச் சமுதாயம் மலரவில்லை என்றால், இந்திய வரலாற்றிலிருந்து நாம் துடைத்தெறியப்படும் நேரம் தூரத்தில் இல்லை! இந்த அபாயத்தில் இருந்து நம்மையும், நம் நாட்டையும்
காப்பாற்றிட அரசியல் ஈடுபாட்டுக் கிறித்தவராகச் செயல்படுவோம்.
1999, டிசம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தங்நாத் சதுர்வேதி என்பவர் மதுரா இரயில்வே நிலையத்தில் இரண்டு டிக்கெட் எடுத்திருந்தார். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 35. தங்நாத் சதுர்வேதி டிக்கெட் கவுண்டரில் ரூ. 100-ஐ கொடுத்திருந்தார். ரூ. 30 பாக்கி பெறவேண்டிய நிலையில், கவுண்டரில் இருந்தவர் ரூ. 10 மட்டுமே திரும்பக் கொடுத்திருக்கின்றார். தனக்குச் சேரவேண்டிய பாக்கி ரூபாய் இருபதைத் திரும்பக் கேட்டு தங்நாத் சதுர்வேதி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்தார். ஏறக்குறைய 20 ரூபாய்க்காக 22 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. நூறுமுறை விசாரணை நடந்திருக்கின்றது.
‘இருபது ரூபாய்க்காக எதற்கு இவ்வளவு போராட்டம்?’ என்று பலரும் கேட்டுள்ளனர். கடைசியாக 2022-ஆம் ஆண்டு மதுரா மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தங்நாத் சதுர்வேதிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் இந்திய இரயில்வே நிறுவனம் தங்நாத் சதுர்வேதிக்கு ரூபாய் இருபதைக் கொடுக்கவேண்டும் என்றும், 1999-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரை ஓராண்டிற்கு 12ரூ என்று ரூபாய்
15,000 இழப்பீடாக 30 நாள்களுக்குள் கொடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
‘தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்பதற்கிணங்க, இருபது ரூபாய்க்காக 22 ஆண்டுகளாகப் போராட வேண்டியுள்ளதை இந்நிகழ்வு சமூகத்தின் நிலையைக் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கின்றது. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை; போராட்டமே வாழ்க்கைக்கு வேரூட்டமாகிறது.
‘சஞ்சார் சாத்தி’
(Sanchar Saathi) மொபைல்
செயலியானது, இந்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை (GOI) மூலம்
உருவாக்கப்பட்ட, மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு முன்னெடுப்பு (citizen-centric initiative) ஆகும்.
பெருகிவரும் இணையக் குற்றங்களையும், மொபைல் திருட்டுகளையும் சமாளிப்பதற்காக இச்செயலியை 2025, சனவரி 17 அன்று ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. தகவல் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “இதுவரை 14 மில்லியன் பயனர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். தினமும் 2000 சைபர் குற்றங்கள் இந்தச் செயலி மூலம் கண்டறியப்படுகின்றன” என்று
தெரிவித்திருந்தார்.
‘சஞ்சார் சாத்தி’ என்னும் இந்தச் செயலியைப் புதிய விதிமுறையின்படி ஆப்பிள், கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் 90 நாள்களுக்குள் இந்தியாவில் பயன்படுத்தத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் கைப்பேசிகளிலும் இந்தச் செயலி முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது.
இது
தன் மக்களை அச்சுறுத்தும் மற்றும் உளவு பார்க்கும் கருவி என்றும், இது ஒவ்வொரு குடிமக்களின் அசைவு, தொடர்பு மற்றும் முடிவுகள் அனைத்தையும் உன்னிப்பாக உளவு பார்ப்பதற்கான ஒரு வழிமுறை; மேலும், மக்களுடைய தொலைப்பேசிகளில் எவ்வகை ஆவணங்களையும் திணிக்கவும் (implant files) இச்செயலி பயன்படுத்தப்படலாம்.
இது ஒரு புதிய பெஹாசஸ் (Pegasus) என்று மொபைல்
நிறுவனங்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
பெரும்பான்மையான
இணையப் பயனர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிரா தித்ய சிந்தியா ‘சஞ்சார் சாத்தி’ செயலியை முன்கூட் டியே நிறுவவேண்டும் என்று மொபைல் போன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
மக்களுக்கு
எதிரான செயல்பாடுகளைப் போராடித்தான் அடையவேண்டும் என்பதால்தான் என்னவோ, தினமும் உலகம் முழுவதும் பல போராட்டங்கள் பற்றிய
செய்திகளே அதிக அளவில் காணக்கிடக்கின்றன. வாழ்க்கையே போராட்டம்தானே? போராடித்தான் பார்ப்போமே!
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை ‘தி.மு.க. எதிர் த.வெ.க.’ எனக் கட்டமைக்க நடிகர் விஜய் முயல்கிறார். த.வெ.க. கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, மூன்றாவது அணியான அ.தி.மு.க.வை ‘பா.ச.க. தலைமையில் மற்றும் பலர்’ என மட்டம் தட்டுகிறார். கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் நடிகர் விஜய்க்காக சட்டமன்றத்தில் நரம்பு புடைக்க வாதிட்ட எடப்பாடியை, அவரது அ.தி.மு.க. கட்சியை ‘ஊழல்வாதிகள்’ என்கிறார் நடிகர் விஜய்.
அ.தி.மு.க.வினரோ கட்டபொம்மன் பாணியில் ‘வயலுக்கு வந்தாயோ? நாற்று நட்டாயோ? மஞ்சள் அரைத்தாயோ?’ எனப் பதில்
தருவதில் வியப்பில்லை. அவர்கள் ‘கட்சி ஆரம்பித்த பின் மக்களை நடிகர் விஜய் எத்தனை முறை சந்தித்தார்?’ எனக் கேட்கும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. நாம் அறிந்தவரை இரண்டு ஆண்டுகளில் பத்து முறை பொதுவெளிக்கு வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஒருமுறை கூறுகிறார்: ‘நான் அண்ணா கூறியபடி மக்களைச் சந்திப்பேன்.’
மெரினா
கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே இந்த வாசகம் சுவரில் பொறிக்கப்பட்டு இருக்கும்: ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்காகச் சேவை செய்; மக்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு.’
நடிகர்
விஜய், எழுதித் தந்ததை ஏற்றத்தாழ்வுகளுடன் படிப்பவர். தன் கொள்கைத் தலைவர்களுக்குப் பனையூர் கட்சி அலுவலகத்தில் தனியே சென்று மாலை மரியாதை செய்பவர். பொதுவெளிக்கு வராதவர். அவர் ஓர் உள்முகச் சிந்தனையாளர். ஆதாயம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் நகர்கிறவர். தான் பெற்ற பயிற்சியின்படி கையைக் காலை ஆட்டிப் பேசுபவர். சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாதவர். கூட்டமான இடங்களுக்குச் செல்வது இவருக்குப் பிடிக்காது. பிறருடன் பேச விரும்பாதவர். தனிமை விரும்பி. இவை அனைத்தும் த.வெ.க.
தலைவர் விஜய் அவர்களுக்குப் பொருந்திப் போகிறது.
நடிகர்
விஜய் ‘தான் முதல்வர், தன் கட்சி ஆட்சி’ என வெடித்துப் பேசுகிறார்.
விஜய் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்க பா.ச.க.
தயாரித்த அரசியல் வெடி என்கிறார்கள். பற்றி எரிந்த திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து இவர் பேசவில்லை. கடந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாளில் வட இந்தியாவில் தாக்கப்பட்ட
கிறித்தவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிராம விவசாயத் தொழிலாளர்களின் நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிக் கொதிக்கவில்லை. அதில் தேசப்பிதா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து குரல் தரவில்லை. மாநில அரசின் நிதி, விழுக்காடு பங்கீட்டை அதிகரித்தது குறித்து வாய் திறக்கவில்லை. நெல்லை கவின் ஆணவப் படுகொலை குறித்துக் கருத்து கூறவில்லை. ஏனென்றால், குறிப்பிட்ட மேல்சாதி வாக்கில்
பாதிப்பு ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கையாம்! ஏன்
கோடி கோடியாக ரூபாய் கொட்டப்பட்டு, தனக்காக எடுக்கப்பட்ட ‘ஜனநாயகன்’
பட வெளீயிடு குறித்தும் கள்ள மௌனம் சாதிக்கிறார்; வாய் திறக்க மறுக்கிறார்.
தொலைக்காட்சி
பிரபலமும், திரையிசை அமைப்பாளருமான ஜேம்ஸ்
வசந்தன் நடிகர் விஜய் குறித்து விமர்சிக்கும்போது, “எல்லாரையும் பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறது என்ன குரூரமான மனம்? படம் வரலைன்னு இரசிகர்கள் கொந்தளிச்சுட்டு இருக்கான்; ஆனா, வாய் திறக்காம இருக்கிறாரு. அவர்களுக்கு அறிவுரை சொல்லவாவது வாய் திறக்கணும். இல்லை! விஜய் மேல ஆத்திரம் வருது. தமிழ்நாட்டு இளைஞர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கார்.
தன் சொந்தப் பிரச்சினைக்கே போராடாதவர், எப்படி மக்கள் பிரச்சினைக்காகப்
போராடுவார்? நடிகர்
விஜய் அவர்களின் இரசிகர்கள் அவரது கதாநாயகப் பிம்பத்தில் மதிமயங்கிக் கிடக்கிறார்கள்” என்கிறார்.
ஒளி
தருகிறது என மின்மினிப் பூச்சி
பின் போய் தொலைந்து போகிறார்கள் மக்கள். தனிநபர் வழிபாடு ஓங்கி இருக்கிறது; துதிபாடி மகிழ்கிறார்கள். அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டமாக இருக்கிறார்கள். கதாநாயகப் பிம்பம், நீர்க்குமிழியாய் பறக்க, அது
உடைபடும்போது உண்மையை உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை. சமூக ஊடகங்களில் செயல்பாட்டாளர்களாகத் திகழும் விஜய் இரசிகர்கள், கற்பனைச் செய்திகளில் வாழ்கிறார்கள். அவதூறு பரப்புவதில் வல்லவர்களாக உள்ளார்கள். கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் நடிகர் விஜய் டெல்லி விசாரணைக்குச்
சென்றபோது, இரண்டு விஜய் ஆதரவு தொலைக்காட்சிகளே ‘அவர் கைது செய்யப்படுவார்’ எனப்
பொய்ச்செய்தி போட்டுப் பரபரப்புக் கூட்டியது. அதற்குத் த.வெ.க.
கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார்,
“அது சன் தொலைக்காட்சி அவிழ்த்து விட்ட பொய்” எனத் தன் இரசிகர்களை மடை மாற்றுகிறார். இவர்களது இரசிகர்கள் ‘ஜனநாயகன்’
திரைப்படம் வெளி வராதது குறித்து தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். விஜய் இரசிகர்கள் ‘இன்பநிதி படம் வருகிறது, எங்கள் தலைவர் படம் ஏன் வரவில்லை?’ என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
விஜய்
இரசிகர்கள், தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாற்றைக் கூறும் ‘பராசக்தி’
படத்தை வறுத்து எடுத்தார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் குறித்து வலைதளங்களில் அட்டைக்கத்தி ஆட்டத்தை இவர்கள் அழகாகச் செய்வார்கள். ஒன்றிய அரசை நோக்கி விஜய் இரசிகர்கள் கேள்வி கேட்க வேண்டும்; ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த எவருமே
பா.ச.க.-வை
நோக்கிக் கேள்விகள் எழுப்புவதில்லை என்பது பெரும் ஐயப்பாடாகும்.
நடிகர் விஜய் அவர்களும் தன் கொள்கை எதிரியான பா.ச.க. குறித்து
வாய் திறக்க மறுக்கிறார்.
சமூக
வலைதளங்களில் ஆர்வமுள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் வீரர் டி.டி.எஃப்,
வாசன் அவர்களைப் பற்றி அறிவார்கள். வாசன் ‘நாளை ஓர் ஊருக்கு வருகிறேன்’
என்று அறிவித்தால், அன்று அவரைக் காண ஆயிரமாயிரம் இளைஞர்கள்
கூடுவார்கள். அவர் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களில் சட்ட விதிகளை மீறினார். பரபரப்புக் காட்டினார். நீதிமன்றம் அவரது ஓட்டுநர் உரிமத்தை இரத்து செய்து அதிரடி காட்டியது. விஜய் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட ரெட் கார்ட் முறை உள்ளது. எந்த மரபுகளுக்கும் நியாயங்களுக்கும் உட்படாத, நெறியற்ற இரசிகர்கள் எதில் சேர்த்தி? இந்தியத் தேர்தல் ஆணைய விதிகளின்படி பொய்ப்பிரச்சாரம் செய்கிற கட்சியைத் தடை செய்யச் சட்டத்தில் இடமில்லை என்பதே உண்மை.
மக்கள்
ஆட்சியைப் பொறுத்தவரை பலவீனமான அம்சம் ‘குழு மனப்பான்மை’ என்கிறார்
சாக்ரடீஸ். அரசியல் தெளிவற்ற, அரசியல்வயப்படாத ஒரு குழு ‘விஜய் இரசிகர்கள்.’ சிறுபான்மை மக்கள் வாக்கு எங்களுக்கு மட்டும்தான் என்பதும், அவர்களின் ஒரு பொய்ப்பிரச்சாரம். சிறுபான்மை மக்களாகிய நாம் விழித்தெழுந்து இவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போம்.