news
சிறப்புக்கட்டுரை
அருள்திரு. எட்மெண்ட் பெக்கர் MEP: இந்தியத் திரு அவையில் காட்சி ஊடகத்தின் முன்னோடி!

தென்னிந்தியத் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் பங்கு அளப்பரியது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையிலும் MEP அருள்பணியாளர்களின் அரிய முயற்சியால், தியாகத்தினால் உருவானதுதான் இம்மறைப்பணித்தளம். ஊடகங்களின் தாக்கம் பெரிதளவு இல்லாத சூழலிலும் அவற்றின் வழியாக ஒரு பெரும் தாக்கத்தை இம்மண்ணில் உருவாக்கியவர்கள் இவர்கள். காட்சி ஊடகத்தின் வழி நற்செய்தியைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற பெருமை இவர்களையே சாரும்.

1951-ஆம் ஆண்டு திண்டிவனம் நடுநிலையத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றார் அருள்திரு. பெக்கர். இவரின் ஆர்வத்தைக் கண்ட அன்றைய பேராயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 1957-இல் மறைக்கல்வியில் சிறப்புப் பயிற்சி பெற்றுவர பெல்ஜியத்திற்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து வந்த அருள்திரு. பெக்கர், பேராயரிடம் ஏழு முன் மொழிவுகளைச் சமர்ப்பித்தார். அவற்றில் ஒன்றுதான் பொதுமக்கள் தொடர்புக்கான நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி நற்செய்திக் கல்விப்பணி நிலையம் ஒன்றை நிறுவுதல். அவ்வாறு 1960-இல் திண்டிவனத்தில் உருவானதுதான்  தமிழ்நாடு ஒலி-ஒளி கல்வி நிலையம். இதன் வழியாக மறைப்பணி, உலகியல் கல்வி, தொழில்வளம், சமுதாய நலம், உழவு, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் திரைப்படங்கள், ஒளிப்பட வில்லைகள் (Flim Slides), ஒலிப்பதிவு நாடாக்கள் ஆகியவற்றைத் தயாரித்து, அதன் வழியாக மக்களின் அறியாமையை நீக்க முனைந்தனர்.  

அருள்திரு. எட்மெண்ட் பெக்கர் MEP

இருபதாம் நூற்றாண்டின் நற்செய்தி அறிவிப்புப் பணியில், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மிக ஆழமாக உணர்ந்த ஓர் இறைவாக்கினர் அருள்திரு. எட்மண்ட் பெக்கர் ஆவார். பிரான்ஸ் நாட்டின் மெட்ஸ் (Metz) நகரில் 1921-ஆம் ஆண்டு பிறந்து, 1947-இல் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர், பாரிஸ் மறைபரப்புச் சபையின் (Missions  Etrangeres de Paris) வழியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.  1948 முதல் 1968 வரை புதுச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தில் இவர் ஆற்றிய பணிகள் இந்தியத் திரு அவையின் தகவல் தொடர்பு வரலாற்றில் ஒரு பொற்காலமாகும்.

நற்செய்தி அறிவிப்பும், ஊடகப் புரட்சியும் (Mobile Mission)

அருள்திரு. பெக்கர் புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டத்திற்கு வந்த காலகட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு நற்செய்தியையும் கல்வியையும் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. திண்டிவனத்தில் புகழ்பெற்ற மறைக்கல்விப் பள்ளியை (Catechist School), அருள்திரு ஆன்ரூ காரோஃப் (Fr. Andru Carof) அவர்களுடன் இணைந்து வழிநடத்திய இவர், திண்டிவனத்தை மையமாகக் கொண்டு புதிய ஊடகப் புரட்சியைத் தொடங்கினார். அதுதான் நடமாடும் மறைபரப்புப்பணி.

அருள்திரு. தாமஸ் காவன் டஃபி அவர்களால் தொடங்கப்பட்ட இப்பள்ளியை, பெக்கர் ஒரு நவீன ஊடகப் பயிற்சி மையமாக மாற்றினார். தந்தை பெக்கரின் பணியின் மற்றோர் அம்சம் என்னவென்றால், இவரும், இவரது குழுவும் மறைக்கல்வி முறைகளைக் காட்சி - கேள்வி ஊடகங்களுக்கு ஏற்பப் புதுப்பித்தனர். அதற்குத் தேவையான புத்தகங்களைத் தயாரித்து திருவிவிலிய மற்றும் வழிபாட்டுப் போதனைகளை ஊக்குவிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். மறைக்கல்வி, திருவிவிலியம் மற்றும் வழிபாடு ஆகிய மூன்றும் இவரது சிந்தனையில் ஒன்றாகவே இருந்தன.

நடமாடும் சினிமா (Mobile Cinema)

அருள்திரு. பெக்கர் ஒரு தனிப்பட்ட வாகனத்தை வடிவமைத்து, அதில் படம் ஒளிபரப்பும் கருவிகள் (Projector) மற்றும் ஒலிபெருக்கிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் தோறும் சென்றார். இரவில் திறந்த வெளிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தமிழ் மொழியில் ஆன்மிக மற்றும் சமூக விழிப்புணர்வுப் படங்களைத் திரையிட்டார். மேலும், திண்டிவனத்தில் புத்தகங்கள், சிறப்பு இதழ்கள், குரல் பதிவு விளக்கங்களுடன் கூடிய ஸ்லைடுகள் மற்றும் பல்வேறு திரைப்படங்களை உள்ளடக்கிய மறைக்கல்வி வள மையத்தை அமைப்பதில் தந்தை பெக்கர் வெற்றி பெற்றார். இந்தப் பொருள்கள் அனைத்தையும் தென்னிந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் உள்ளநடமாடும் மறைப்பணிகுழுக்கள் கடனாகப் பெற்றுப் பயன்படுத்த முடிந்தது.

இந்திய இறையியலாளர்களின் வழிகாட்டி

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய இந்தியத் திரு அவையின் மிக முக்கியமான இறை யியலாளரான அருள்திரு. D.S. அமலோற்பவதாஸ்  அவர்களுக்கு அருள்திரு. பெக்கர் ஆரம்ப காலத்தில் சிறந்த வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார். அருள்திரு. பெக்கரின் ஊடகப் பணிகளால் ஈர்க்கப்பட்டே அருள்திரு. அமலோற்பவதாஸ் பிற்காலத்தில் பெங்களூரில் புகழ்பெற்ற NOCLC மையத்தை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சி ஊடகப் பணியின் முன்னோடி

சாதாரண மக்களுக்கு எழுத்துகளைவிட, காட்சிகளும் ஒலிகளும் மிக வேகமாகச் சென்றடையும் என்பதை அருள்திரு. பெக்கர் உறுதியாக நம்பினார். வெறும் திரைப்படங்களைக் காண்பிப்பதோடு நின்றுவிடாமல், அவரே சொந்தமாகத் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். திண்டிவனத்தில் ஒரு சிறிய திரைப்படக் குழுவை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் புகைப்படக் காட்சி, ஒலியமைப்பு போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினார்.

தன் வாழ்நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களை அருள் திரு. பெக்கர் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிவிலியக் கதைகளை மையமாகக் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இவரது ஊடகப் பணியின் வெற்றியைப் பார்த்த உலகத் திரு அவை,1968-ஆம் ஆண்டு இவரை மீண்டும் ஐரோப்பாவிற்கு அழைத் தது. அங்கு சர்வதேச கத்தோலிக்கத் திரைப்பட அமைப்பில் (OCIC - International Catholic Office for Cinema) இணைந்து, உலகளாவிய கத்தோலிக்க ஊடகப் பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.

பாரிஸ் IRFA ஆவணக்காப்பகமும், பெக்கரின் வரலாற்றுச் சுவடுகளும்

அருள்திரு. பெக்கர் 1981-இல் மறைந்தபோதிலும், அவர் விட்டுச் சென்ற ஊடகச் சொத்துகள் இன்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள பிரான்ஸ் - ஆசியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRFA - Institute de Recherche France-Asia) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அருள்திரு. பெக்கர் பயன்படுத்திய அரிய 16 சுருள்படங்கள், தமிழ்நாட்டுக் கிராமங்களில் அவர் பதிவு செய்த மக்கள் மற்றும் மண் சார்ந்த வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் 1950-களின் தமிழ்நாட்டு வாழ்வியலை விவரிக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் இந்த ஆவணக்காப்பகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அருள்திரு. எட்மண்ட் பெக்கர் வெறும் ஒரு மறைபரப்பாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு சிறந்த கலைஞர், தொலைநோக்குச் சிந்தனையாளர் மற்றும் புதுவை - கடலூர் உயர் மறைமாவட்டத்தின் நவீன ஊடகத் தந்தை. இன்று நாம் திரு அவையில் பயன்படுத்தும் நவீன சமூகத் தொடர்பு சாதனங்கள் அனைத்திற்கும், 70 ஆண்டுகளுக்கு முன்பே திண்டிவனம் மண்ணில் விதையிட்டவர் இந்த உன்னத இறைப்பணியாளர்.

news
சிறப்புக்கட்டுரை
புதுவை மறைப்பணித்தளத்தில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் கல்விப்பணி

இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு பலமான ஆயுதம் உண்டென்றால் அது கல்விதான்என்றார் நெல்சன் மண்டேலா. கல்வியறிவு இல்லாமல் எந்த ஒரு சமூகமும் பண்பட்டச் சமூகமாக வளர முடியாது என்பதைப் புதுவை மறைப்பணித்தளத்தில் கிறித்தவ மறையைப் போதிக்க வந்த பாரிஸ் மறைபரப்புச் சபையினர் (MEP) நன்கு உணர்ந்திருந்தனர். எனவே, அவர்கள் தங்கள் கையில் எடுத்த மாபெரும் ஆயுதம் கல்விப்பணியே.

பிரெஞ்சு அரசுக் கல்லூரி: பிரெஞ்சுப் பகுதியில் இயங்கி வந்த அரசுக் கல்லூரியில் பணியாற்றிய மிஷனரிகளைத் திருத்தூதுப் பணியில் ஈடுபடுத்த விரும்பிய ஆயர் ஹெபர்ட் அவர்கள், அக்கல்லூரியை ஆளுநர் தெஸ் பாசிடம் ஒப்படைத்தார். மீண்டும் 1847, ஜனவரி முதல் தேதி இந்த அரசுக் கல்லூரி பாரிஸ் மறைபரப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1852-ஆம் ஆண்டு வீராம்பட்டினத்தில் இருந்த பழைய குருமடம் இக்கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியாக்கப்பட்டது.

இக்கல்லூரியின் பொறுப்பை ஏற்ற பிறகு மிஷனுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டானபோதிலும், இப்பணியைப் பங்குகளில் பணியாற்றிய மற்ற மிஷனரிகள் பெரிதும் வரவேற்கவில்லை. 1889-ஆம் ஆண்டுவரை இக்கல்லூரி மிஷனரிகளின் கண்காணிப்பில் இயங்கிவந்தது. மறைபரப்புச் சபையிடம் ஒப்படைப்பது, மீண்டும் அரசே ஏற்று நடத்துவது என்று இக்கல்லூரி நிர்வாகம் மாறிக்கொண்டே இருந்ததாலும், திருத்தூதுப் பணிக்குப் போதிய குருக்கள் இல்லாமையாலும்உண்மையில் இக்கல்லூரிப் பொறுப்பு இவர்களுக்குப் பெரும் சுமையாகவே இருந்தது.

பெத்தி செமினேர் பள்ளி: ஆண்களின் கல்விக்காக 1846 மார்ச் 19-இல் வெளி மாணவர்களையும் உள்விடுதி மாணவர்களையும் கொண்ட பெத்தி செமினேர் பள்ளி தொடங்கப்பட்டது. 1859-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் பயின்ற 200 மாணவர்களில், 40 பேர் குருமட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1855-ஆம் ஆண்டு காரைக்கால் மக்கள் மேதகு பொனான் ஆண்டகையிடம் தங்கள் ஊரிலும் ஒரு பள்ளியைத் திறக்கக் கோரிக்கை வைத்ததன் பேரில், அவ்வாண்டு செப்டம்பர் 10-ஆம் நாள் அருள்திரு. திகார்ட் அவர்களின் தலைமையில் காரைக்காலில் ஒரு பெத்தி செமினேர் பள்ளி, புதுவை பெத்தி செமினேர் பள்ளியின் கிளையாகத் தொடங்கப்பட்டது.

1895 முதல் 1900 வரை புதுவை பெத்தி செமினேர் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய அருள்திரு. லெரோய் அவர்கள் முதல் முறையாக இங்கு ஐரோப்பிய மாணவர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களையும் சேர்த்தார். இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன. பேராயர் காந்தி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார். எனவே, இப்போராட்டம் 48 மணி நேரம் மட்டுமே நீடித்தது.

1900 முதல் 1933 வரை இப்பள்ளியின் முதல்வராக இருந்த அருள்திரு. பியர் எஸ்காந்த் அவர்கள் இதன் பெரும்பாலான கட்டடங்களைத் தனது சொந்த செலவிலேயே கட்டினார். 1905-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரெஞ்சு மதச்சார்பின்மைச் சட்டத்தின் விளைவால் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு உள்ளானது. ஆனால், அருள்தந்தை அவர்களின் சாதுரியத்தால் அந்நிலையிலிருந்து தப்பியது. 1925-ஆம் ஆண்டிலேயே இப்பள்ளியில் 1200 மாணவர்கள் பயின்றது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் இப்பள்ளி பாண்டிச்சேரியின் அடையாளமாகத் திகழ்கிறது.

புனித சூசையப்பர் பள்ளி: மேதகு லவுனான் ஆண்டகையின் முயற்சியால் 1868-ஆம் ஆண்டு அருள்திரு. ரெனெவியர் அவர்களை முதல்வராகக் கொண்டு, கடலூர் புதுநகரில் புனித சூசையப்பர் பள்ளி தொடங்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டு இப்பள்ளி கல்லூரியாக உயர்த்தப்பட்டது. ஆனால், போதிய நிதி ஆதாரமின்மையாலும், 1909-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் கொணர்ந்த புதிய ஒழுங்குமுறைச் சட்டங்களாலும் இது மூடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, 1911-ஆம் ஆண்டு கல்லூரிப் பட்டப் படிப்புகள் நீக்கப்பட்டு, மீண்டும் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. பேராயர் லவுனான் ஆண்டகையின் காலத்தில் 1879-ஆம் ஆண்டு அரசாங்கம் கல்விப்பணியில் கொண்டு வந்த சீர்திருத்தங்களாலும், விதித்த நிபந்தனைகளாலும் மறைப்பணியாளர்களின் கல்விப்பணி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானது.

மகளிர் கல்வி: ஆண்கள் கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்களோ அதே அளவு பெண்கள் கல்வியிலும் பாரிஸ் மறைப்போதகச் சபையினர் கொண்டிருந்தனர்பொதுவாக, பெண்களுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு அருள்சகோதரிகளிடம் விடப்பட்டது. புதுவை ஆளுநர் தெஸ்பாசின் வேண்டுகோளின்படி, 1827-ஆம் ஆண்டு புதுவையில் பணிபுரிய அழைக்கப்பட்ட புனித சூசையப்பர் குளூனி சபைச் சகோதரிகள், வெளி மாணவர்களைக் கொண்ட பள்ளி ஒன்றையும், உள்விடுதி ஒன்றையும், இலவசப்பள்ளி ஒன்றையும் விரைவில் நிறுவினர். மேதகு பொனான் ஆண்டகையின் ஏற்பாட்டினால் 1844, பிப்ரவரியில் இக்கன்னியர்கள் காரைக்காலில் அடுத்தடுத்து தொழில் வகுப்பு ஒன்றையும், இளம்பெண்களுக்கு ஒரு பள்ளிளையும், சிறுவர்களுக்கு ஒரு பள்ளியையும் ஏற்படுத்தினர்.

மேதகு பொனான் ஆண்டகையின் வழிகாட்டுதலில், அருள்திரு. லூயிஸ் சவீனியன் துப்புய் அவர்களின் முயற்சியால் 1844, அக்டோபர், 16-ஆம் நாள்தூய மாதா இதயச் சபைதொடங்கப்பட்டது. அடுத்த நாளே பெண்கள் கல்விக்கென்று சிறிய பள்ளி ஒன்றும் திறக்கப்பட்டது. 1892-ஆம் ஆண்டில் இச்சபையினர் புதுவையிலும் கடலூரிலும் மூன்று பள்ளிகளையும், மற்ற இடங்களில் 17 பள்ளிகளையும் நடத்தி வந்தனர். அருள்திரு. லெகோத் மற்றும் பெத்தி செமினேர் பள்ளியில் பணியாற்றிய குருக்களின் உதவியால் தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு புனித ஞானப்பிரகாசியார் சபை அருள்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. பெரியநாயகம் கம்ப்ரோன் தனது சொந்தச் செலவில் இச்சபைக்குச் சம்மனசுகள் தெருவில் ஒரு வீட்டைப் புதுப்பித்துக் கொடுத்தார். தொடர்ந்து 1853, மார்ச் முதல் நாளில் ஒரு பள்ளி திறக்கப்பட்டது. 1903-ஆம் ஆண்டில் இவர்கள் புதுவையில் ஒரு பள்ளி மற்றும் தங்கும் விடுதியையும், நெல்லித்தோப்பு, உழவர்கரை, வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு பள்ளியையும் கண்காணித்து வந்தனர்.

சிறிய பள்ளிகள்: 1844-ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் பிப்ரவரி 13-வரை நடைபெற்ற பாண்டிச்சேரி முதல் மறைமாநிலப் பேரவையின் விளைவாக, 1892-ஆம் ஆண்டு புதுவை மறைப்பணித்தளத்தில் 161 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. இச்சிறிய பள்ளிகள் மறைபரப்புக் கண்ணோட்டத்தில் பெரிய கல்லூரிகளைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மேலும், மக்களிடையே மறைப்பணியாளர்களுக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தன. எனவே, மிகுந்த உற்சாகத்தோடு மறைப்பணியாளர்கள் தங்களின் மறைப்பணித்தளங்களில் சிறிய பள்ளிகளை அதிகமாகத் தொடங்க முயற்சி செய்தனர்.

கடலூர் புதுநகர் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்கள் அனுமதிக்கப்படாததைக் கண்டு வேதனையுற்ற அருள்திரு. J. துருஹின் அவர்கள், 1908-ஆம் ஆண்டு இம்மாணவர்களுக்காகத் தனது இல்லத்திலேயே புனித மரியன்னை ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். இப்பள்ளியே பாரிஸ் மறைபரப்புப் பணித்தளத்தில் உள்ள சிறிய பள்ளிகளுக்கு மாதிரிப்பள்ளியாக அமைந்தது. இப்பள்ளியில் தரமான கல்வி அளிக்கப்பட்டதாலும், அருள்தந்தை அவர்களின் சீரிய முயற்சியினாலும் புனித மரியன்னைப் பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்த அனைத்து மாணவர்களும் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் உயர் வகுப்புகளுக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். பாரிஸ் மறைபரப்புப் பணியாளர்கள் தொடங்கியது மிக மிகச்சிறிய பள்ளிகள்தான்; ஆனால், அவையே புதுவை மறைமாநில மக்களின் சமூக-பொருளாதார விடுதலைக்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும், முழுமனித உருவாக்கத்திற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாவும் இருந்தன.

புதிய கல்வித் திட்டம்: அருள்திரு. துருஹின் மற்றும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி இருவரும் இணைந்து பேராயர் மோரெல் அவர்களிடம் புதுவை மறைப்பணித்தளத்தில் கல்விப்பணிக்கான ஒரு முன்னோடித் திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர். இவர்களது புதிய கல்வித்திட்டம் பின்வருமாறுபுதுவை மறைப்பணித்தளத்தில் உள்ள அனைத்துச் சிறிய பள்ளிகளும் ஒரே மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்; அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படவேண்டும்; பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் உயர்த்தப்படவேண்டும்; 500-க்கு மேல் கிறித்தவர்கள் வாழும் ஊர்களிலும் சிற்றூர்களிலும் ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்படவேண்டும்; அனைத்து மாணவர்களுக்கும் சாதிப் பாகுபாடின்றி இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டும். பேராயர் மோரெல் அவர்கள் இப்புதிய கல்வித்திட்டத்திற்கு உடனடியாக மனமுவந்து ஒப்புதல் வழங்கினார்.

மறைமாநிலப் பள்ளிகளின் கூட்டமைப்பு (DGS): பேராயர் மோரெல் அவர்கள் 1918-ஆம் ஆண்டு கடலூர் புதுநகர் பங்கினையும், கிராமப்புறங்களில் தனித்தனியே இயங்கி வந்த சிறு பள்ளிகளை  ஒருங்கிணைக்கின்ற மைய அமைப்பை உருவாக்கும் பொறுப்பையும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களிடம் ஒப்படைத்தார். மறைப்பணித்தளத்தில் இருந்த மறைப்பணியாளர்களின் முயற்சிகளை ஒன்றுசேர்க்கமறைமாநிலப் பள்ளிகளின் கூட்டமைப்புநிறுவப்பட்டது.

இக்கூட்டாண்மை நிர்வாகத்தின் முதல் தலைவராக பேராயர் மோரெல் அவர்களும், இதன் முதல் இயக்குநராக அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களும் செயல்பட்டு வந்தனர். உடனடியாகஆரம்பக் கல்விக்குழுஒன்று அமைக்கப்பட்டது. 1920-இல் திண்டிவனத்திற்கு மாற்றப்பட்ட கல்வி வாரியம், தந்தையின் மறைவிற்குப்பின், 1944 முதல் மீண்டும் கடலூரில் இயங்க ஆரம்பித்தது.

சிறுவர்களின் தோழன்இதழ்: புதிய கல்வித் திட்டத்தினைச் செயல்படுத்த முனைப்புடன் நின்று செயல்பட்டவர் அருள்திரு. J. துருஹின் ஆவார். 1916-ஆம் ஆண்டுசிறுவர்களின் தோழன்என்ற இதழை அவர் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு வாரமும் கற்பிக்கப்படவேண்டிய பாடங்கள் வாராந்திரப் பாடத்திட்டமாக வெளியிடப்பட்டன. 1916-ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விதழ் 1941-ஆம் ஆண்டு வரை அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டது. அவரது மறைவிற்குப்பின், அவ்வப்போதுஆசிரியர்களின்  தோழன்என்ற பெயரில் இவ்விதழ் வெளியிடப்பட்டது. 1959-ஆம் ஆண்டு முதல் இவ்விதழ் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இறையியல் மாத இதழாகதோழன்என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

திண்டிவனம் கல்விப்பணியின் மையமாதல்: அருள்திரு. தாமஸ் கவான் டஃபி தனது கல்விப் பணியின் தலைமையிடமாக  1920-ஆம் ஆண்டு திண்டிவனத்தைத் தேர்வு செய்தார். அங்கிருந்த புனித கபிரியேல் சபைச் சகோதரர்களிடம் தங்கி, புதிய கல்வி வாரியத்தின் பணிகளைத் தொடங்கினார். DGS பள்ளிகளின் இயக்குநருக்கு உறுதுணையாகபள்ளிகளின் ஆய்வாளர்என்ற  பதவி உருவாக்கப்பட்டு, அதன் முதல் ஆய்வாளராக அருள்திரு. J.H. கஸ்தோன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை உயர்த்தவும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்கள் பின்வரும் புதிய தொலைநோக்குத் திட்டத்தைத் தீட்டினார்.

திண்டிவனத்தில் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைத்தல். பயிற்சியில் சேரும் மாணவர்கள் உரிய கல்வித்தகுதியை அடைய தயாரிப்புப் பள்ளி நிறுவுதல்; தனது கல்விக்கொள்கைகளைச் சோதனை செய்ய ஒரு மாதிரிப் பள்ளி  நிறுவுதல். பயிற்சி காலத்திலேயே மாணவர்களுக்கு வேதியர் பயிற்சியும்  அளித்தல். பயிற்சி பெற்றவர்களையே ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்.

மேற்கண்ட புதிய  கல்வித்திட்டத்தின்படி 1921-இல் திண்டிவனத்தில் 22 மாணவர்களுடன் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பயிற்சிப் பள்ளிக்குப் போதுமான மாணவர்களைச் சேர்க்க புனித அன்னாள் ஆரம்பப்பள்ளி, சகோதரர் கிளோத்தின் தலைமையில் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

கத்தோலிக்க நிறுவனம்: திண்டிவனத்தில் மாதிரிப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி அனைத்தும் ஒன்றுசேர்ந்தகத்தோலிக்க நிறுவனம்அமைக்கப்பட்டது. 1923-ஆம் ஆண்டு அருள்திரு. A.S. கோலாஸ் அவர்கள் அந்நிறுவனத்தின் முதல் தலைவரானார். 1930-ஆம் ஆண்டு இவர் பேராயரானதும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களை இந்நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்க தந்தை அவர்கள் கற்பித்தலில் தொடர்பு மையமுறை, உளவியல் முறை, செயல்வழிக் கற்றல் முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலைப் புரிந்துகொள்ள, நேரடியாகக் களத்திற்குச் சென்று திறனாய்வு செய்யஉலாவரச் செய்தல்என்னும் முறை நடைமுறையில் இருந்தது. மேலும், பள்ளியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கமாணவர் பாராளுமன்றம்முறையாக நடத்தப்பட்டது. இவர் 1933-ஆம் ஆண்டு கத்தோலிக்கச் சாரணிய இயக்கத்தை உருவாக்கினார்.

புதுவை மற்றும் பிற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளின் நலன் மற்றும் நிர்வாகம் சார்ந்த உரிமைகளை அரசிடம் முறையாகப் பெற்றிட 1931-ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில்கத்தோலிக்கக் கல்விக்கழகம்ஒன்றை, திண்டிவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கி, அதன் முதல் இயக்குநராகச் செயல்பட்டார். தற்போது இக்கழகம் சென்னையிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு கல்விப்பணியில் அவர் அரசாங்கத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவருடைய அயரா உழைப்பாலும் முயற்சியாலும் 1941-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது  ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட ஆசிரிய - வேதியர்கள் உருவாக்கப்பட்டு மறைப்பணித்தளத்தில்  மிகுந்த உற்சாகத்தோடு  பணிசெய்து வந்தனர்.

புதுவை மறைப்பணித்தளத்தில் உள்ள கிராமப் புறங்களிலும் அடிப்படைக் கல்வியைத் தரமாகத் தந்திட புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, கல்வியில் வியத்தகு மாற்றங்களைச் செய்த பெருமை மேதகு மோரெல் ஆண்டகை அவர்களையும், அவரது வழிகாட்டுதலில் திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல்படுத்திய அருள்திரு. துருஹின் மற்றும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களையுமே சாரும்.

பேராயர் A.S. கோலாஸ் அவர்கள் தனது பணியை நிறைவு செய்து இந்திய ஆயரான மேதகு அம்புரோஸ் ஆண்டகையிடம் தனது மந்தையை ஒப்படைத்தபோது, புதுவை மறைமாநிலத்தில் 157 ஆரம்பப்பள்ளிகள், 30 நடுநிலைப்பள்ளிகள், 13 உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. பாரிஸ் மறைபரப்புச் சபையினர் விதைத்த கல்விப்பணியின் பலனாக இன்று பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டத்தில் மூன்று கல்லூரிகள், ஒரு தொழிற் பயிற்சிப் பள்ளி, ஒரு COSE பள்ளி, 19 மேல்நிலைப் பள்ளிகள், 16 உயர்நிலைப்பள்ளிகள், 22 நடு நிலைப்பள்ளிகள், 85 ஆரம்பப்பள்ளிகள், 4 மழலையர் பள்ளிகள் அக இருள் அகற்றி, அறிவு புகட்டிக் கொண்டிருக்கின்றன.

news
சிறப்புக்கட்டுரை
ஏணியாய் தோணியாய்... ஆசிரியர்கள்!

ஆசிரியர்கள் ஆணிவேர்கள்! வேலை செய்வது வெளியில் தெரியாவிட்டாலும், மாணவர் இனம் பூக்களாய் மலர்வதும், பூமியில் கனிவதும் ஆசிரியர்களால்தான்.

ஆசிரியர்கள் மெழுகுவர்த்திகள்! உருகி உருகி உருக்குலைந்து போவதை உலகம் உணராவிட்டாலும் மனிதர்கள் ஒளிர்வதும் மடமையிருள் அகல்வதும் ஆசிரியர்களால்தான்.

ஆசிரியர்கள் ஏணிகள்! இளைய சமுதாயத்தை இமயத்தில் ஏற்றி வைப்பதும், இனிய சமுதாயம் படைக்க கருவியாய் அவர்களை ஆக்கி வைப்பதும் ஆசிரியர்கள்தாம்.

ஆசிரியர்கள் தோணிகள்மூளையின் செயல்கள் மூழ்கிவிடாமல்அறிவின் பயணத்தை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கிற அரும்பணியை ஆசிரியர்கள் மட்டும் செய்யாதிருப்பின், சர்க்கரை வாழ்வைச் சந்திக்க முடியுமா இச்சமூகம்?

ஒழுக்கநெறி வளர்க்கும் விளக்கவுரை ஆசிரியர்கள்! ஆளுமைத்திறன் வழங்கும் தோழமைக் கரம் ஆசிரியர்கள்மாணவர் இதய மேடைகளில் மகத்தான அன்புணர்வைச் சுரக்கச் செய்யும் உதய கீதங்கள் ஆசிரியர்கள்! மென்மையான உணர்வுகளை மலர்ப்பிக்கும்  உண்மையான உழவர்களும் கூட ஆசிரியர்கள்தாம்.

செய்கின்ற சேவையைத் தொய்வின்றிச் செய்வதால்தான் தெய்வங்களுக்கு முன்னுள்ள இடத்தை ஆசிரியர்களுக்குக் கொடுத்துமாதா, பிதா, குரு, தெய்வம்என வரிசைப்படுத்தினர் முன்னோர். ஒரு கண்ணில் கண்டிப்பு; மறு கண்ணில் கற்கண்டின் இனிப்பு. உளியின் உரசல்களைத் தாங்கிக்கொள்ள முடிகிற சிக்கிமுக்கிக் கற்களால் மட்டுமே சீர்மிகுந்த சிலைகளாக உருமாற முடியும்.

கண்டிப்பு என்னும் கடிவாளங்கள் போட ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காவிட்டால்கண்டிப்பாகப் பண்பின் அடையாளங்கள் கல்வி நிலையங்களிலிருந்து காணாமலே போய்விடும். அரசு சிந்திக்கவேண்டும்.

யானைக்குப் பலம் தும்பிக்கை; மாணவர்க்குப் பலம் ஆசிரியர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை. எழுதுகோல் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வல்லவன். ஏழையின் அளவுகோல் தெரிந்து மாணவர்களிடம் அன்பு காட்டும் ஆசிரியர் நல்லவன். தாய்மடி இழந்த குழந்தைகளையெல்லாம் தாங்கும் மடி ஆசிரியர்கள்தானே!

அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு; ஆசிரியர்கள் மட்டுமே இரண்டும்! ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்பது வாழும் முறைக்கு அலங்காரம்; சாதி, மத, பேதம் என்பனவெல்லாம் சமுதாயத்தைச் சீரழிக்கும் அலங்கோலம். சின்னப் பிள்ளைகள் அணிந்துவரும் சீருடைகள் மட்டுமே சமத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அடையாளம். அமர் அக்பர் அந்தோணி மூவரையும் அருகருகே அமர்த்தி அழகு பார்ப்பவை வகுப்பறைகள்தானே!

மாடியின் குழந்தையும், சேரியின் பிள்ளையும் கூடி உறவாடி ஓடும் மைதானம் பள்ளிக்கூடங்கள் தவிர வேறென்னஎனவே, ஆசிரியர்கள் என்பவர்கள் ஒருமைப்பாட்டின் கொடியை ஏந்தி வரும் தூதுவர்கள். வேற்றுமை இருள் அகற்ற வேர்வை சிந்தும் தூயவர்கள்.

எதிர்கால இந்தியா வகுப்பறையில் இருக்கிறதுஎன்றது கோத்தாரி கமிஷன். தேசப்பற்றும் தெய்வப் பற்றும் பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் பால்சோறு. தேசப்பற்றை ஊட்டி வளர்க்கிறது தேசிய மாணவர் படைநல்ல பல சேவைகளைச் செய்ய ஊக்குவிக்கிறது நாட்டு நலப்பணித் திட்டம். சுற்றுச்சூழல் தரும் சுகவாழ்விற்குப் பாதை அமைத்துத் தருகிறது பசுமை இயக்கம். வஞ்சம் தீர்க்கும் மனிதர்களைக் கூட நெஞ்சில் ஏற்கும் உள்ளம் தருகிறது சிறுவர் செஞ்சிலுவைச் சங்கம். இப்படி இயக்கங்களை வழி நடத்தும் என்ஜின்களே ஆசிரியர்கள். இந்தியாவை வலுப்படுத்தும் இரும்பு மனிதர்களும் அவர்கள்தாம்.

உடுக்கை இழந்தவன் கைக்கும், படிப்பை மறந்தவன் வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசமில்லை. ஒருவகையில் ஆசிரியர்கள் மனிதர்களின் மானம் காக்கப் போராடும் மன்னர் பரம்பரைகள்.

மாணவர் எதைக் கற்கிறார் என்பது முக்கியமல்ல; எப்படிக் கற்கிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஜான் டூபே.

சாக்பீஸ் கோடு - அது மாணவர்கள் தங்கள் கனவு வாழ்வைக் கண்டுபிடிக்க ஆசிரியர்கள் அமைத்துக் கொடுக்கும் ரோடு! அது வெறும் கோடல்ல; வெளிச்சக்கீற்று. அக்கீற்றை அறவொளியாய்  உண்டுதானே மகசூல் செய்கிறது மாணவ நாற்று! புத்தகங்களை ஆசிரியர்கள், பூமிக்கு அறிவின் ஆயுதங்களாக அறிமுகப்படுத்தியிராவிட்டால் நூற்றாண்டுகால நூல்கள் கூட நூலாம்படையிடம் சிக்கிச் சிதைந்து போயிருக்குமே!

வகுப்பறையும் வாத்தியார்களும் வேறு பணி செய்திருந்தால், அணாவுக்கும் பேனாவுக்கும் இங்கே வேலை இல்லாமல் போயிருக்கும். ஆண்டு விழா மேடைகளில் அரிதாரம் பூசாமல், ஆளான ஹீரோக்கள் அரிது அரிதுஉடற்கல்வி ஆசிரியர் உரம் போட்ட காரணமே விளையாட்டு வீரனுக்கு விருது.

தமிழ் வளர்த்தது சங்கப் பலகை. கல்வி வளர்ப்பது கரும்பலகை. ஆகவே தலைமைப்புலவன்  நக்கீரனும், தரணி புகழும் நல்லாசிரியனும் போற்றப்படவேண்டிய பொக்கிஷங்கள்தானே!

சிற்பிக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக வேறுபாடில்லை. மரத்தைச் செதுக்கி மயக்கும் சிலை வடிப்போர் ஆசாரிகள். மனிதர்களை உருக்கி மாணிக்கங்களாய்ச் சமைப்போர் ஆசிரியர்கள்.

ஆசிரியப் பணி குறைப்பணியுமல்ல, அரைப் பணியுமல்லஅறப்பணி! ஆகவே ஆலயப்பணிக்குத் தங்களை அர்ப்பணிப்போரை விடவும், ஆசிரியப் பணிக்குத் தங்களை அர்ப்பணம் செய்யும் ஆசிரியர்கள்தான் உண்மையான அறங்காவலர்கள்.

அரியாசனங்களும் அறியாச்சனங்களும் சொந்தக் காலில் நிற்கும் திறனை நினைவில் கொண்டது ஆசிரியர்களால்தான். சட்டம் பேசுவோரும், சட்டசபையில் பேசுவோரும் பள்ளிக்கூடங்களில் பயிற்சி பெற்றிராவிட்டால் ஒலிப்பெருக்கி முன் நின்று ஓலம்தான் விட்டுக் கொண்டிருப்பர்.

எலிக்கறி உண்ணும் ஏழையின் பிள்ளையும்வழிப்பறி செய்து கொண்டு வாழ்ந்தவன் குழந்தையும், கணிப்பொறி இயக்கும் காலம் கனிந்துள்ளதென்றால் அதற்குக் காரணம் ஆசிரியர்கள்தானே!

ஸ்கூல் படிப்பைச் சுத்தமாய் மறந்திருந்தால், ஸ்கேல் பிடிக்கும் அழகை அறிந்திருப்பானா அந்தப் பொறியாளன்நாட்டின் முதல் குடிமகனானாலும், மூத்த குடிமகனானாலும் கலைமகனாம் ஆசிரியர்கள் கல்வி போதித்திராவிட்டால் காணாமலே போயிருப்பரே! ஆசிரியர்கள் மட்டும் உபதேசம் உரைத்திராவிட்டால்உலகில் ஒரு தேசமும் உருப்பட்டே இருக்காது. குருத்துவம் மருத்துவம் இவைகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணம் ஆசிரியர்களின் நிபுணத்துவம். ஆகவே ஆசிரியர்கள்தாம் மண்ணுலகின் மகத்துவம்.

படிப்பறிவு கொள்ளாமல் பகுத்தறிவு ஏது? ஓர் அரிஸ்டாட்டில் இல்லாமல் அலெக்சாண்டர் யாரு? இயேசுவும் அல்லாவும் கிருஷ்ணரும் புத்தரும் நல்லொழுக்க வாழ்விற்கு நற்செய்தி போதித்ததால் அவர்களும் தெய்வங்கள் வடிவில் வாழ்ந்த ஆசிரியர்களே!

குடியரசுத்தலைவர் அளவுக்கு உயர்ந்த டாக்டர் கலாம், ஒவ்வொரு மேடையிலும் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கே முதலில் வைக்கிறார் சலாம்! பிஞ்சு வயதில் பின் பெஞ்சில் அமர்த்தி, பென்சில் வரையக் கற்றுக்கொடுத்த நினைவுகளிலிருந்து நீங்க முடியாமல்தான் மற்றவர்கள் கூட மறந்தவர்களாகிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாகிறார்கள்.

ஆசிரியர்கள் ஏணிகள்தாம். ஓய்விற்குப்பின் ஏங்கிப்போய்க் கிடக்கிறதே அந்த ஏணிகள்! ஆசிரியர்கள் தோணிகள்தாம். கடைசிக் காலங்களில் கண்ணீர்க் கூடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறதே அந்தத் தோணிகள். பெற்ற பிள்ளைகள் கைகழுவலாம்; கற்றப் பிள்ளைகள் கைவிடலாமா? முன்வந்து, முகம் பார்த்து, மேனாள் மாணவனெல்லாம் ஒருமுறை தன் குரல் காட்டிச் சென்றால், கண்மூடும் முன்னே களிப்படைய மாட்டானாடா உன் ஆசிரியன்!

news
சிறப்புக்கட்டுரை
புதுவையில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் மறைப்பணி மற்றும் உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம்

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை என்பது ஒரு தனிப்பட்ட புனிதரின் ஆன்மிக வழியை (Charism) மையமாகக் கொண்ட துறவறச் சபை அல்ல; மாறாக, உள்நாட்டுத் திரு அவையைப் பற்றிய ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு மறைப்பணியியலின் வெளிப்பாடாகும். தொடக்கத்தில் அது ஒரு துறவற சபையாக இருப்பதற்குப் பதிலாக, ஓர் இயக்கமாகவே இருந்தது. குறிப்பாக, பல்லுவும், அவரது தோழர்களும் உரோமானிய அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காகக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லவில்லை; மாறாக, உண்மையான ஆசியத் திரு அவைகளை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கே சென்றனர். ஆகவே, உள்நாட்டுக் குருக்களை உருவாக்குவது பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை, மறைப்பணியின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாக அமைந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 1664, சனவரி 28-ஆம் நாள் தாய்லாந்தின் அயூத்தியாவில் நடைபெற்ற முதல் அயூத்தியா திரு அவைக் கூட்டம்வேதியர்களுக்குப் பயிற்சி அளித்தல், அவர்களைப் பணிக்குருத்துவத்திற்கு ஆயத்தப்படுத்துதல்என்ற தலைப்பில் முழு அதிகாரத்தை ஒதுக்கியது.

வீராம்பட்டினத்தில் பெரிய குருமடம் (1771)

1664-ஆம் ஆண்டிலேயே பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை மறைப்பகுதிகளுக்குச் சேவை செய்யும் வகையில்கொலேஜ் ஜெனரல்என்ற பெயரில் ஒரு பெரிய குருமடம் தாய்லாந்தின் அயூத்தியாவில் நிறுவப்பட்டது. இதன் முதல் அதிபராக அருள்தந்தை  லனோ பணியாற்றினார். ஆரம்பத்தில் ஆறு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்குருமடம், பின்னர் மக்காவிலிருந்து வந்த மூன்று மாணவர்களால் மேலும் ஒன்பதாக வளர்ச்சி பெற்றது. 1765-1767-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பர்மா-தாய்லாந்து போரின் காரணமாக, குருமடம் தென் வியட்நாமிற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், சமயத் துன்புறுத்தல் காரணமாக 1771-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியின் பாதுகாப்பில் இருந்த பாண்டிச்சேரி அருகிலுள்ள வீராம்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. இக்காலத்தில் அருள்தந்தை பிஞோ தெ பெஹேன்  குருமடத்தின் அதிபராக 1774-ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். பின்னர் அருள்தந்தை மாதோன் பொறுப்பேற்றார். 1775-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பயஸ்  இந்தியாவில் இயங்கி வந்த இந்தப் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை பொதுக்குருமடத்தை அதிகாரப்பூர்வ மாக அங்கீகரித்து, திருத்தூதர் பீடத்தின் சிறப்புப் பாதுகாப்பின்கீழ் வைத்தார். எனினும், கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பாண்டிச்சேரி அதிக தொலைவில் இருந்ததால் மாணவர் சேர்க்கை குறைந்து, 1781-இல் குருமடம் மூடப்பட்டது. பின்னர் 1807-ஆம் ஆண்டு பினாங்கில் மீண்டும் தொடங்கப்பட்டு ஆசியத் திரு அவைக்குப் பெரும் சேவையாற்றியது.

உழவர்கரையில் பெரிய குருமடம் (1778)

1776-ஆம் ஆண்டு இயேசு சபை தடை செய்யப்பட்டபோது பாண்டிச்சேரி பகுதியில் இயங்கி வந்த இயேசு சபையினரின் மறைப்பணிப் பொறுப்பை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை ஏற்றுக்கொண்டது. இதுவே பின்னாளில்பாண்டிச்சேரி மறைப்பணிஎன்று அழைக்கப்பட்டது. ஆயர் பிரிகோ பாண்டிச்சேரி மறைப்பணியின் பொறுப்பை ஏற்றபோது, அவருடன் ஐந்து பாரிஸ் அயலக மறைபரப்புச் சபைக் குருக்கள் மட்டுமே வந்தனர். இந்தியாவை விட்டு வெளியேற மறுத்த பதினைந்து இயேசு சபை அருள்தந்தையரும் அவர்களுடன் இணைந்து இறைப்பணியைத் தொடர்ந்தனர். 1777-இல் அருள்தந்தை நிக்கோல் ஷாம்பெனுவா மற்றும் அருள்தந்தை ஜீன் சார்ல்ஸ் பெரின் இந்தியா வந்த பின்னர், 1820 வரை புதிய மறைப்பணியாளர்கள் மிகக் குறைவாகவே அனுப்பப்பட்டனர்பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், உள்நாட்டு இறையழைப்புகளை வளர்த்து, இந்தியக் குருக்களை உருவாக்கி, இந்தியத் திரு அவையைத் தன்னிறைவு பெற்ற உள்நாட்டுத் திரு அவையாக உருவாக்கவேண்டும் என்ற பாரிஸ் அந்நிய வேத போதக சபையின் மறைப்பணித் தொலைநோக்குப் பார்வை ஒருபோதும் மங்கவில்லை. இதுவே பின்னாளில் பாண்டிச்சேரி மறைத்தளத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவில் கத்தோலிக்கக் குருக்கள் உருவாக்கத்தின் வரலாற்றிற்கும் வலுவான அடித்தளமாக அமைந்தது.

ஆயர் பிரிகோ 1777-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைப்பணியின் பொறுப்பை ஏற்றபோது, வீராம்பட்டினத்தில் இயங்கி வந்த கொலேஜ் ஜெனரல் (College General)  வழியாக இந்திய உள்நாட்டுக் குருக்களை உருவாக்கவேண்டும் என்று ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக மூன்று இளைஞர்களை அக்குருமடத்திற்கு அனுப்பினார். ஆனால், வெளிநாட்டினருடன் தங்கள் பிள்ளைகள் தங்கிப் பயிலக்கூடாது என்ற பெற்றோரின் எதிர்ப்பினால், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர். இந்நிலையை உணர்ந்த ஆயர் பிரிகோ மக்களின் மனநிலையையும், பண்பாட்டு உணர்வுகளையும் மதித்து பாண்டிச்சேரி மறைத்தளத்திற்கெனத் தனியான பெரிய குருமடம் தொடங்கவேண்டும் என்று தீர்மானித்தார். 1778-ஆம் ஆண்டுகிராண்ட் செமினேர்என்ற பெயரில் உழவர்கரையில் பெரிய குருமடம் நிறுவப்பட்டது. இதன் முதல் அதிபராக, பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையில் இணைந்த மேனாள் இயேசு சபை அருள்தந்தையான அருள்தந்தை புஸான் நியமிக்கப்பட்டார். 1788, டிசம்பர் 20 அன்று தோமாஸ்  என்ற முதல் இந்தியர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து 1789, சனவரி 2-ஆம் நாள் பிலிப் என்ற இரண்டாவது இந்தியரும் குருவாக அருள்பொழிவு பெற்றார்.

புதுவையில் புனித யோசேப்பு குருமடம் (1792)

1791, நவம்பர் 8-ஆம் நாள் ஆயர் பிரிகோ இறைவனடி சேர்ந்தபின் ஆயர் ஷாம்பெனுவா மறைத்தளத்தின் பொறுப்பை ஏற்றார். குருமடம் நகரத்திற்கு அருகில் இருக்கவேண்டும் என்ற நோக்கில் 1792-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பேரால யத்திற்கு அருகில்புனித யோசேப்பு குருமடம்நிறுவப்பட்டது. இதன் அதிபராக அருள்தந்தை மாஞ்ஞி நியமிக்கப்பட்டார். பன்னிரண்டு மாணவர்களில், ஷாம்பெனுவா 1810-ஆம் ஆண்டு இறக்கும்முன் ஒன்பது இந்தியர்களைக் குருவாகத் திருநிலைப்படுத்தினார். அவர்களில் இருவர் பின்னர் இறந்தனர்; ஒருவர் தேவையான தகுதிகளைப் பெறவில்லை.

1810-ஆம் ஆண்டு ஆயர் எபேர் மறைத்தளத்தின் பொறுப்பை ஏற்றபோது, மறைப்பணியின் நிலை மிகவும் சவாலானதாக இருந்தது. அப்போது மொத்தம் ஒன்பது ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஆறு பேர் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபைக் குருக்களும், மூவர் மேனாள் இயேசு சபை அருள்தந்தையரும் ஆவர். நாற்பது ஆண்டுகள் குருமட அதிபராகப் பணியாற்றிய அருள்தந்தை மாஞ்ஞி தனது மாணவர்களில் பதின்மூன்று பேரை குருத்துவ அருள்வாழ்விற்கு வழிநடத்திய பெருமையைப் பெற்றார்.

இதேகாலத்தில், திப்பு சுல்தானின் துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குருமடத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந் தது. 1813-ஆம் ஆண்டு குருமடத்தை மூடுவது குறித்து ஆயர் எபேர் சிந்தித்தார். இந்தச் செய்தியை அறிந்த அருள்தந்தை அபே டுபுவா தனது சொந்த நிதியிலிருந்து குருமடத்தை நடத்த முன்வந்தார். அவரது தாராள மனப்பான்மை காரணமாக, குருமடம் தொடர்ந்து செயல்பட முடிந்தது. ஆயர் எபேர் தனது ஆயர் பணிக்காலத்தில் எட்டு இந்தியர்களைக் குருக்களாகத்  திருநிலைப்படுத்தினார்.

1832-ஆம் ஆண்டு அருள்தந்தை பிகோ போகிளேர் அதிபராகப் பொறுப்பேற்று, சில ஒழுங்கு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அவை மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் பலர் குருமடத்தை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் மாற்றப்பட்டு, அருள்தந்தை ஓலாஞ் பொறுப்பேற்றாலும் நிலைமை சீரடையவில்லை. இதன் விளைவாக, குருமடம் தற்காலிகமாக மூடப்பட்டது. 1835-ஆம் ஆண்டு அருள்தந்தை லெஹோடி அதிபராக வந்து குருமடத்தை மீண்டும் திறந்து, அதன் வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டினார்.

பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டமும் (1844), குருமட வளர்ச்சியும்

1836-ஆம் ஆண்டு ஆயர் எபேர் மறைவிற்குப் பிறகு, ஆயர் பொன்னான் மறைத்தளத்தின் பொறுப்பை ஏற்றார். அப்போது அவருடன் 20 பிரெஞ்சு மறைப்பணியாளர்கள், நான்கு இந்தியக் குருக்கள், 102 வேதியர்கள் இணைந்து சுமார் 82,000 கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு இறைப்பணி ஆற்றி வந்தனர். 1842-ஆம் ஆண்டு அருள்தந்தை கேயோ மற்றும் அருள்தந்தை ஷெவாலியே ஆகியோர் மறைப்பணியின் எதிர்கால வளர்ச்சிக்காக அனைத்து மறைப்பணியாளர்களும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவேண்டும் என்று பரிந்துரைத்தனர். பெரும்பாலான மறைப்பணியாளர்கள் இத்தகையதொரு கூட்டத்தை ஒரு திரு அவைக் கூட்டத்தின் (Synod) வடிவில் நடத்த வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளியிட்ட னர். இதனை ஏற்றுக்கொண்ட ஆயர் பொன்னான் 1844, சனவரி 18-ஆம் நாள் பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திரு அவைக் கூட்டம் சிறிய குருமடம், பெரிய குருமடம் உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம் மற்றும் மறைப்பணியின் எதிர்கால வளர்ச்சி ஆகிய முக்கிய அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து, புதுவை மறைத்தளத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. 1844-ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டம், இந்தியத் திரு அவை வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல். 1845-1846 காலப்பகுதியில், பாண்டிச்சேரி மறைப்பணி மூன்று தனித்தனி மறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது (பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், மைசூர்). கோயம்புத்தூர் மற்றும் மைசூர் மறைமாவட்டங்கள் 1898-ஆம் ஆண்டு வரை தங்களுக்கெனத் தனிப்பட்ட குருமடங்களை நடத்தி வந்தன.

புதிய குருமடமும் - சாதியமும்

1844, பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டத்திற்குப் பிறகு ஆயர் பொன்னான் மறைத்தள வளாகத்திலேயே புதிய சிறிய குருமடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், பெரிய குருமடக் கட்டடம் தொடங்கும் முன்பே எதிர்பாராத சிக்கல்கள் உருவாயின. அக்காலத்தில், சாதி மரபுகளை மதிக்கும் நோக்கில் பேராசிரியர்கள் மாணவர்களிடமிருந்து தனியே உணவருந்துவது வழக்கமாக இருந்தது. ஒருநாள், குருமடப் பேராசிரியரான அருள்தந்தை லெரூ எந்த முன்னறிவிப்பும் இன்றி, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து இந்திய முறைப்படி உணவருந்தினார். இந்தச் செய்தி வெளியே பரவியதும், பல கத்தோலிக்கர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 1847, செப்டம்பர் 29 அன்று மற்றொரு நிகழ்வு நடந்தது. மாலை திருப்புகழ் (Vespers) மற்றும் ஊர்வலத்தில் உதவுவதற்காக குருமாணவர்கள் தலைப்பாகை (Turban) அணியாமல், அங்கி (Cassock) மட்டும் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் தலைப்பாகை அணிவது குருக்களின் மரபுச் சின்னமாகக் கருதப்பட்டதால், இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் தேவாலயத்திற்கு வருவதை நிறுத்தினர். பாண்டிச்சேரி பேராலயமே வெறிச்சோடியது. ஆயர் பொன்னான் வெளியிட்ட ஆயர் மடலும் இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கொண்டு வரவில்லை. இதனால் 1847, டிசம்பர் 27 அன்று குருமடம்காலவரையற்ற விடுமுறைஎன்ற பெயரில் தற்காலிகமாக மூடப்பட்டது. 1848, சனவரியில் அருள்தந்தை லெரூ வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், பதற்றம் தணிந்தது. குருமடம் மீண்டும் திறக்கப்பட்டபோது வெறும் 17 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த அனுபவத்திற்குப் பிறகு ஆயர் பொன்னான் சிறிய குருமடத்தைபெட்டி செமினேரி கல்லூரிஎன்ற கல்வி நிறுவனமாக மாற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் கல்வி வழங்கும் நிலையமாக்கினார்.

பெரிய குருமடத்தின் புதிய தொடக்கம்

சிறிய குருமடப் பிரச்சினைகள் சீரடைந்த பிறகு ஆயர் பொன்னான் தனது முழு கவனத்தையும் பெரிய குருமட வளர்ச்சியின்மீது செலுத்தினார். சிறிய குருமடத்தையும், பெரிய குருமடத்தையும் தனித்தனியாகப் பிரித்தார். 1850, மே மாதத்தில், மறைத்தளத் தோட்டத்தில் புதிய பெரிய குருமடக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1850, செப்டம்பர் 18 அன்று புதிய பெரிய குருமடம் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் முதல் இயக்குநர்களாக அருள்தந்தை கொதேல் மற்றும் அருள்தந்தை லிழோன் நியமிக்கப்பட்டனர். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்தக் குருமடம் வழியாக ஒன்பது இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். 1777 முதல் 1861 வரை பணியாற்றிய நான்கு ஆயர்கள் இணைந்து மொத்தம் 27 இந்தியக் குருக்களை மட்டுமே திருநிலைப்படுத்த முடிந்தது.

பாண்டிச்சேரியில் புனித யோசேப்பு மண்டலப் பெரிய குருமடம் (1897)

1873-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் 25 இந்தியக் குருக்கள் பணியாற்றி வந்தனர். மேலும், குருத்துவ அழைப்பைப் பெறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தது. இதனால் 1850-ஆம் ஆண்டு கட்டப்பட்ட குருமடம் மாணவர்களின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாமல் போனது. எனவே, ஆயர் லாவேனான் புதிய குருமடக் கட்டடங்களை எழுப்பினார். 1879-ஆம் ஆண்டு அருள்தந்தை போர், குருமடத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது 25 ஆண்டுகாலத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட குருமாணவர்கள்பெட்டிசெமினேரில் இணைந்தனர். ஆயர் லாவேனான் அவர்களின் ஆயர் பணிக் காலத்தில் 28 இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மறைமாவட்டமும் ஒரு பேராசிரியரையும் குருமடப் பணிக்காக வழங்கியது. பாண்டிச்சேரி மறைமாவட்ட மண்டலத்திற்கு எனப் பொதுவான ஒரு குருத்துவக் கல்லூரியை நிறுவ வேண்டும் என்ற கருத்து ஆயர் காந்திக்கு உருவானது. இக்கருத்தை அம்மண்டலத்தின் பிற ஆயர்களும் ஏற்றுக்கொண்டனர். இதன் விளைவாக, 1897-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பெரிய குருமடம், தென்னிந்தியாவில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை மறைப்பணிக்கு உள்பட்ட அனைத்து மறைமாவட்டங்களுக்கும் சேவை செய்யும் மண்டலப் பெரிய குருமடமாக உயர்ந்தது. 1909-ஆம் ஆண்டு, பாண்டிச்சேரி பேராயர் மொரேல் சந்திர நாகூரில் மறைப்பணியாற்றிய அருள்தந்தை காயே அவர்களைக் குருமடத்தின் அதிபராக நியமித்தார். அவரது 25 ஆண்டுகாலச் சிறப்பான தலைமையில், பாண்டிச்சேரி மண்டலக் குருமடம் வழியாக நான்கு மறைமாவட்டங்களுக்கு 90 இந்தியக் குருக்கள் உருவாக்கப்பட்டனர்.

பெங்களூருவில் புனித பேதுரு பாப்பிறைக் குருமடம் (1934)

பாண்டிச்சேரி குருமடத்தில் இடவசதி பெரும் சவாலாக மாறியது. இதனால் 1928-ஆம் ஆண்டு திரு அவை மாகாண ஆயர்கள் ஒன்றுகூடி, பெங்களூருக்குப் பெரிய குருமடத்தை மாற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தனர். இந்தத் தீர்மானம் 1934-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், பாண்டிச்சேரியின் புகழ்பெற்ற பெரிய குருமடம், இன்று புனித பேதுரு பாப்பிறை குருமடம் என்ற பெயரில் அறியப்படும் புதிய குருமடமாகத் திகழத் தொடங்கியது. 1934-ஆம் ஆண்டில் குருமடத்தில் நான்கு பேராசிரியர்கள் பணியாற்றினர்: அருள்தந்தை காயே (முதல்வர்) மெய்யியல் கற்பித்தார்; அருள்தந்தை கேங்கனல் அறநெறி இறையியல் கற்பித்தார்; அருள்தந்தை புவாந்தே திருவிவிலியம் கற்பித்தார்; அருள்தந்தை ஓதியோ மறைக்கோட்பாட்டு இறையியல் கற்பித்தார். அப்போது பாண்டிச்சேரி, சேலம், கும்பகோணம், கோவை, பெங்களூரு மறைமாவட்டங்களைச் சேர்ந்த 60 குருமாணவர்கள் கல்வி பயின்றனர்.

புதிய குருமடக் கட்டடத்தின் கட்டுமானச் செலவில் புனித திருத்தூதர் பேதுரு பாப்பிறை சங்கம் குறிப்பிடத்தக்க நிதி உதவி வழங்கியது. அதன் நன்றிக்கடனாக, புதிய குருமடத்திற்குபுனித பேதுரு குருமடம்என்ற பெயர் சூட்டப்பட்டது. 1942-ஆம் ஆண்டு உரோமில் உள்ள திருத்தூதர் பீடம், புனித பேதுரு குருமடத்தை அதிகாரப்பூர்வமாக மண்டலப் பெரிய குருமடமாக அங்கீகரித்தது.

1942-ஆம் ஆண்டு பெரிய குருமடம் தற்காலிகமாக சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1946-ஆம் ஆண்டு, 36 ஆண்டுகள் சிறப்பாக முதல்வராகப் பணியாற்றிய அருள்தந்தை காயே ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அருள்தந்தை ஜாக்மார் (1946 -1949), அருள்தந்தை பாசாயிஸ்தேகி  (1949-1960), அருள்தந்தை ரோசின்னியோல் (1960-1973) ஆகியோர் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் இறுதி முதல்வர்களாகப் பணியாற்றினர்.

1973-ஆம் ஆண்டு உதகமண்டலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள், புனித பேதுரு குருமடத்தின் முதல் இந்திய அதிபராகப் பொறுப்பேற்றார். இவ்வாறு 1844-இல் புதுவை திரு அவைக் கூட்டம் கனவு கண்ட இலக்கு நிறைவேறியது. இந்தியக் குருக்கள் உருவாக்கப்பட்டதோடு, குருமடத்தின் நிர்வாகமும் இந்திய ஆயர்களின் தலைமையிலும் பொறுப்பிலும் ஒப்படைக்கப்பட்டன.

1934-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி குருமடம் பெங்களூருக்கு மாற்றப்படும் வரை மேலும் 100 இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் இறுதியாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர் ஆயர் மார்க் கோபு. பின்னர் அவர் 1949-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி-கடலூர் துணை ஆயராகவும், 1953-ஆம் ஆண்டு ஹைதராபாத் பேராயராகவும் பணியாற்றினார். 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, புனித பேதுரு பாப்பிறை குருமடத்தின் நிர்வாகக் குழுவில் 17 ஆயர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 250 ஆண்டுகளாக 2,123-க்கும் மேற்பட்ட குருக்கள் இக்குருமடத்தில் பயின்று திரு அவைக்குப் பணியாற்றியுள்ளனர். மேலும், இக்குருமடம் மூன்று கர்தினால்கள், 50-க்கும் மேற்பட்ட பேராயர்கள் மற்றும் ஆயர்களை உலகத் திரு அவைக்கு வழங்கியுள்ள பெருமையைப் பெற்றுள்ளது.

பாண்டிச்சேரி குருமடம் இந்தியாவின் முதல் குருமடம் அல்ல; அதற்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளில் குருமடங்களை நிறுவ பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பல குருமடங்கள் தோன்றியிருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் உள்நாட்டுத் திரு அவைகளுக்காக இந்திய உள்நாட்டுக் குருத்துவத்தைத் தொடர்ந்து, திட்டமிட்ட முறையில் உருவாக்கிய முதல் நீடித்த முயற்சி பாண்டிச்சேரியில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை நிறுவிய குருமடமே என்பதில் ஐயமில்லை.

1844-ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டிச்சேரி திரு அவைக் கூட்டம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அத்திரு அவைக் கூட்டம் உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம் குறித்து முன்வைத்த பரிந்துரைகள், பின்னாளில் உரோமைத் தலைமைப்பீடத்தின் மறைபரப்பு பேராயம் அமைப்பு உலகெங்கும் உள்ள மறைப்பணிக் குருமடங்களுக்காக வெளியிட்ட வழிகாட்டுதல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. எனவே, புதுவை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை குருமடத்தின் வரலாறு என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் வரலாறு மட்டுமல்ல; இந்தியக் கத்தோலிக்கத் திரு அவையின் தன்னிறைவு, உள்நாட்டுக் குருக்களின் உருவாக்கம் மற்றும் உள்நாட்டுத் திரு அவையின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் இறையருளின் வரலாறாகும்.

news
சிறப்புக்கட்டுரை
(MEP 250) மனிதர்களை உருவாக்கிய மரபு! திண்டிவனத்தின் வேதியர் உருவாக்கப் பயணம்

திரு அவையின் வரலாறு என்பது ஆலயங்களின் வரலாறு மட்டுமல்ல; அது மனிதர்களை உருவாக்கிய வரலாறும் ஆகும். குறிப்பாக, இறைநம்பிக்கையைத் தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்ற இறைமக்களின் வரலாறில்லாமல் எந்தத் திரு அவையின் வளர்ச்சியையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

தமிழ்நாட்டுத் திரு அவையின் வளர்ச்சியில் கத்தோலிக்க வேதியர்கள் ஆற்றிய பங்கு அளவிட முடியாதது. கிராமங்களின் மையத்தில் வாழ்ந்து, இறைவார்த்தையை அறிவித்து, இறைமக்களை வழிநடத்தி, குருக்களின் அருள்பணியை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றவர்கள் இவர்களே. குருக்களின் வருகை அரிதாக இருந்த காலங்களிலும், இறைநம்பிக்கைச் சமூகங்களின் ஆன்மிக வாழ்வை உயிர்ப்புடன் காத்து வளர்த்தவர்கள் வேதியர்களே.

தொலைநோக்குப் பார்வையிலிருந்து தொடங்கிய பயணம்: அருள்தந்தை தாமஸ் கவன்-டஃபி

1918-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைத்தளத்திற்கு வந்த அருள்தந்தை தாமஸ் கவன்-டஃபி, வளர்ந்து கொண்டிருந்த கிறித்தவச் சமூகங்களுக்கு உள்ளூர் பணியாளர்கள் தேவை என்பதை ஆழமாக உணர்ந்தார். குறிப்பாக, மக்களின் மொழியிலும் பண்பாட்டிலும் வாழ்ந்து, நற்செய்தியை அவர்களின் வாழ்க்கையோடு இணைத்துச் சொல்லக்கூடிய வேதியர்களின் அவசியத்தை இவர் தெளிவாகக் கண்டறிந்தார்.

இதன் விளைவாக, 1921-ஆம் ஆண்டு திண்டிவனத்தில் ஆசிரியர் - வேதியர் உருவாக்கப் பள்ளியை நிறுவினார். கல்வியையும் மறைக்கல்வியையும் இணைத்த இந்த முயற்சி, ஒரு பயிற்சி மையத்தின் தொடக்கம் மட்டுமல்ல; தமிழ்நாட்டுத் திரு அவையின் எதிர்காலத்திற்கான தீர்க்கதரிசன முதலீடாகவும் அமைந்தது.

இவரது பார்வையில் வேதியர் என்பது வெறும் போதகர் அல்லர்; மாறாக, நற்செய்தியின் சாட்சி, சமூகத்தின் வழிகாட்டி, இறைநம்பிக்கையின் பாதுகாவலர் மற்றும் உள்ளூர் திரு அவையின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்.

மறுமலர்ச்சிக்கு உயிரூட்டியவர்: அருள்தந்தை எட்மெண்ட் பெக்கர்

இரண்டாம் உலகப்போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தப் பணிக்குப் புதிய உயிர் அளித்தவர் அருள்தந்தை எட்மெண்ட் பெக்கர். வேதியர் ஊழியம் திரு அவையின் நற்செய்திப் பணிக்குத் தவிர்க்க முடியாத கருவி என்பதை உணர்ந்த இவர், மறுமலர்ச்சிப் பணியை உறுதியுடன் முன்னெடுத்தார்.

1961-ஆம் ஆண்டு பேராயர் அம்புரோஸ் அவர்களின் ஆசிர்வாதத்துடன் வேதியர் உருவாக்க மையம் மீண்டும் திறக்கப்பட்டது. “அவர் பெருகவும் நான் சிறுகவும்வேண்டும்என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் அதன் ஆன்மிக இலட்சியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

முறையான பாடத்திட்டங்கள், ஆன்மிக உருவாக்கம், தமிழ்மொழியில் மறைக்கல்வி வளங்கள் மற்றும் மேய்ப்புப் பணிக்கான நடைமுறைப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் வேதியர் உருவாக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. 1963-ஆம் ஆண்டு முதல் குழுவைச் சேர்ந்த வேதியர்கள் Missio Canonica பெற்றுப் பல மறைமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வு, இந்தப் பணியின் வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்தியது.

உறுதியான அடித்தளத்தை அமைத்தவர்: அருள்தந்தை ஆந்திரே கரோஃப்

1961-ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட மையத்தின் முதல் இயக்குநராக அருள்தந்தை ஆந்திரே கரோஃப் பொறுப்பேற்றார். அறிஞர், வரலாற்றாசிரியர் மற்றும் அர்ப்பணிப்புள்ள மறைப்பணியாளர் என்ற சிறப்புகளை ஒருங்கே கொண்டிருந்த இவர், உருவாக்கப் பணிக்கு உறுதியான திசையையும், நிலையான அடித்தளத்தையும் வழங்கினார்.

இவரது பார்வையில் வேதியர் என்பது அறிவைப் பரப்புபவர் மட்டுமல்லர்; இறைவார்த்தையில் வேரூன்றிய, திரு அவை உணர்வில் வளர்ந்த, இறைமக்களோடு பயணிக்கும் இறைநம்பிக்கையின் சாட்சி. எனவே, மனித, ஆன்மிக, அறிவுசார் மற்றும் மேய்ப்புப்பணிசார் பரிமாணங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான உருவாக்க முறையை இவர் வலியுறுத்தினார்.

ஒரு மையத்திலிருந்து ஓர் இயக்கமாக...

திண்டிவனத்தில் தொடங்கிய இந்த முயற்சி, பின்னாளில் தமிழ்நாட்டுத் திரு அவையின் மறைக்கல்வி மற்றும் உருவாக்க இயக்கமாக வளர்ந்தது. இன்று TNBCLC என அறியப்படும் இந்த நிறுவனம் வேதியர் உருவாக்கம், விவிலிய விழிப்புணர்வு, திருவழிபாட்டுப் புதுப்பிப்பு மற்றும் பொதுநிலையினர் உருவாக்கம் ஆகிய துறைகளில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

1961 முதல் 2009 வரை நூற்றுக்கணக்கான வேதியர்கள் இம்மையத்தில் உருவாக்கப் பெற்றுள்ளனர். அவர்களின் ஊழியத்தின் வழியாக ஆயிரக்கணக்கான குடும்பங்களும், கிராமச் சமூகங்களும் இறைநம்பிக்கை வாழ்வில் வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தப் பணி புள்ளி விவரங்களால் அளவிட முடியாத ஆன்மிகச் செல்வமாகும்.

உயிரோடு வாழும் பாரம்பரியம்

பாண்டிச்சேரியில் MEP மறைப்பணியாளர்களின் 250 ஆண்டுகால அருள்பணியை நாம் நினைவுகூரும் இந்த நேரத்தில், இவர்களின் தொலைநோக்குப் பார்வை, நற்செய்தி ஆர்வம் மற்றும் மனித உருவாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பின் உயிருள்ள நினைவுச் சின்னமாக திண்டிவனம் TNBCLC விளங்குகிறது.

அருள்தந்தை தாமஸ் கவன்-டஃபி விதைத்த விதை, அருள்தந்தை எட்மண்ட் பெக்கர் புதுப்பித்து வளர்த்த மரம், அருள்தந்தை ஆந்திரே கரோஃப் உறுதியான வேரூன்றச் செய்த பாரம்பரியம் ஆகியவை இன்று பல தலைமுறைகளின் வாழ்வில் கனி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

திரு அவையின் எதிர்காலம் அதன் மனிதவள உருவாக்கத்தில்தான் உள்ளது என்பதை திண்டிவனத்தின் வேதியர் உருவாக்க வரலாறு நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகிறது.

news
சிறப்புக்கட்டுரை
புதுவை மிஷனில் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையினரின் மறைப்பணியின் தியாக வரலாறு

மறைப்பணியின் வரலாற்றில் என்றும் நிலைக்கும் புகழுடன் விளங்கும் மறைபரப்புச் சபைகளுள் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (Paris Foreign Missions Society - MEP) சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. 1776-ஆம் ஆண்டு (250 ஆண்டுகளுக்கு முன்) புதுவை மண்ணில் வேரூன்றிய MEP சபையின் மறைப்பணி, இறைநம்பிக்கையை அறிவித்ததோடு நிற்காமல், உள்ளூர் திரு அவையின் வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தையும் அமைத்தது. எனவே, 2026-ஆம் ஆண்டை, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டம் யூபிலி ஆண்டாகக் கொண்டாடி மகிழ்கிறது. இந்த அருள் நிறைந்த ஆண்டில், பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் தோற்றமும் வளர்ச்சியும், புதுவை மறைப்பணியின் உருவாக்கமும் வளர்ச்சியும், MEP ஆயர்களின் மேய்ப்புப் பணியும், தென்னிந்திய திரு அவைக்கு சிறப்பாக, புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு அவர்கள் வழங்கிய மகத்தான ஆன்மிக, கல்வி, சமூக மற்றும் பண்பாட்டுப் பங்களிப்புகளையும், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அறிந்துகொள்வது சாலச்சிறந்தது.

யார் இந்த MEP மிஷனரிகள்?

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபைக்கு நீண்ட வரலாறு உண்டு. இச்சபையானது பல்வேறு துறவற சபைகளிலிருந்து வேறுபட்டது. இச்சபைக் குருக்கள் துறவற வார்த்தைப்பாடு கொடுப்பதில்லை. மணத்துறவு பூண்டவர்கள். இவர்கள் தமது தாய்நாட்டில் பணியாற்றுவதில்லை. பிற நாடுகளில் நற்செய்தி அறிவிப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இதனாலேயே இச்சபை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை என அழைக்கப்படுகிறது. இச்சபை அதிகாரப்பூர்வமாக 1663-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதற்கு முன்பே சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன

1629-ஆம் ஆண்டு வெந்தாதூர் கோமகன் கென்றி தெ லெவி, உலக வாழ்வின் பெருமைகளையும் பதவிகளையும் துறந்து, தன்னை முழுமையாக இறைப்பணிக்காக அர்ப்பணித்தார். ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்காக அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட இவரது பணிகள், பிரான்சில் புதிய ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாக, 1630-ஆம் ஆண்டுதேவ நற்கருணைக் குழுஅவரால் நிறுவப்பட்டது. பின்னர் 1646-ஆம் ஆண்டு மன்னர் 14-ஆம் லூயி அனுமதியுடன் வெளிநாட்டு மறைப்பணிக்காக குருக்களை உருவாக்கும் உயரிய நோக்குடன் பாரிசில் ஒரு குருமடம் நிறுவப்பட்டது.

1653-ஆம் ஆண்டு சீனா மற்றும் டோங்கிங் பகுதிகளில் பணியாற்றிய இயேசு சபைக்குரு அருள்திரு. அலெக்சாந்தர் தே ரோட், மறைப்பணி நடைபெறும் நாடுகளிலேயே உள்ளூர் குருக்களை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடைய சிந்தனையை உரோமை மறைபரப்புப் பேராயத்தின் முன்வைத்தார். அவரது முயற்சியின் பலனாக, 1657-ஆம் ஆண்டு அருள்தந்தையர்கள் பிரான்சுவா பல்லு, லாம்பெர்ட் தெ லா மோத் ஆகியோர் உரோமை சென்று மறைப்பணிக்கான அனுமதியைப் பெற்றனர். 1658-ஆம் ஆண்டு அவர்கள் அப்போஸ்தலிக்க விக்கர்களாக  நியமிக்கப்பட்டனர். அவர்களோடு 1660-ஆம் ஆண்டு அருள்திரு. இஞ்ஞாசி கொத்தோலெந்தி அவர்களும் அப்போஸ்தலிக்க விக்கராக நியமிக்கப்பட்டார். இம் முயற்சிகளின் சிகரமாக பிரான்சில் 1663-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் நாள் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதற்கு பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி அரசு அங்கீகாரமும், 1664-ஆம் ஆண்டு திருத்தந்தை ஏழாம் அலெக்சாந்தர் திரு அவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதலும் வழங்கினர். தொடக்கத்தில் இவர்கள் கொச்சின்-சீனா, டோங்கிங், சீனா ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, சையாம் மற்றும் தெற்கு ஆசியப் பிரெஞ்சுக் காலனிகளில் பணியாற்றத் தொடங்கினார்.

புதுச்சேரி எவ்வாறு ஆசிய மறைப்பணித்தளங்களின் மையம் ஆனது?

தொடக்கத்தில் MEP சபை மிஷனரிகள் தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா வழியாகச் சென்றனர். ஆனால், அப்போது புதுவையில் அவர்கள் மறைப்பணி எதுவும் தொடங்கவில்லை. புதுச்சேரியுடனான இச்சபையின் உறவு 1688-ஆம் ஆண்டில் தொடங்கிப் படிப்படியாக வலுவடைந்தது. சையாம் (தாய்லாந்து) நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் அங்கிருந்து வெளியேறிய அருள்தந்தையர்கள் தெ லியோன், தெ லா விங்ச் ஆகிய மறைப்பணியாளர்கள் புதுச்சேரியில் தஞ்சமடைந்தனர். ஜீதியாவில் இயங்கி வந்த  MEP சபையின் பொருளகம் 1688-ஆம் ஆண்டு புதுச்சேரியில் நிறுவப்பட்டது. 1720-ஆம் ஆண்டு புதுவையில் பெரியக்கடை வீதிக்கு அருகில் புனித காணிக்கை அன்னை கோவிலை இவர்கள் கட்டினர். மேலும், 1767-ஆம் ஆண்டு சையாமிலிருந்த குருத்துவக் கல்லூரி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1771-ஆம் ஆண்டு புதுச்சேரி அருகிலுள்ள வீராம்பட்டினத்தில் புதிய குருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. 1775-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பத்திநாதர், அதனை உரோமைத் திரு அவையின் நேரடி பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தார். இதன் மூலம் புதுச்சேரி ஆசிய மறைப்பணிகளுக்கான குறிப்பிடத்தக்க மையமாக உருவெடுக்கத் தொடங்கியது.

இயேசு சபையினரின் மலபார் மிஷன் MEP சபையிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?

18-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இயேசு சபைக்கு எதிராக ஐரோப்பாவில் அரசியல் மற்றும் மத எதிர்ப்புகள் தீவிரமடைந்தன. 1759-ஆம் ஆண்டிலிருந்து பல நாடுகளில் அவர்களது பணிகள் தடைசெய்யப்பட்டன. இறுதியில், 1773-ஆம் ஆண்டு இயேசு சபையானது திருத்தந்தை 14-ஆம் கிளமெண்ட் அவர்களால் உலகமெங்கிலும் தடை செய்யப்பட்டது. அப்போது மதுரை மற்றும் கோரமண்டல் பகுதிகளின் மறைப்பணிகள் தலைமையை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டன. அந்தச் சூழலில், புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் முக்கிய மையமாகவும், அதன் ஆளுநரான திரு. லா லொரிஸ்தான் பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் பணிகளை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இதனால் புதுச்சேரி கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் மறைப்பணியாளர்களின் முக்கிய இடைநிலையமாகவும், MEP சபையின் நிர்வாக மையமாகவும் மேலும் வலிமை பெற்றது.

இந்நிலையில், தென்னிந்திய மறைப்பணிகளின் எதிர்காலம் குறித்து உரோமை மறைபரப்புப் பேராயமும், பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயியும் ஆலோசித்து, அவற்றின் பொறுப்பை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தனர். அதன் பின்னர், அச்சபை சையாம் நாட்டின் அப்போஸ்தலிக்க விக்கராகப் பணியாற்றிய ஆயர் பியர் பிரிகோ அவர்களைத் தென்னிந்திய மறைப்பணிகளின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. உரோமை மறைபரப்புப் பேராயம் திருத்தந்தை ஆறாம் பத்திநாதரின் ஆணையின்படி, முன்னர் இயேசு சபையினர் நிர்வகித்த கோரமண்டல் கடற்கரை மறைப்பணிகளை அவரது மேற்பார்வையில் ஒப்படைத்தது. 1776-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் நாள் பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி இந்த ஏற்பாட் டிற்கு அரசு ஒப்புதலை வழங்கினார். பின்னர், அதே ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் அரசாணை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையிடம் அனுப்பப்பட்டதன் மூலம், தென்னிந்திய மறைப்பணிகளின் பொறுப்பு அதிகாரப்பூர்வமாக அச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1777-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் நாள் ஆயர் பிரிகோ சட்டப்பூர்வமாக மலபார் மிஷனை ஏற்று, மறைப்பணியைத் தொடங்கினார். இவ்வாறு, அரசியல் மற்றும் மத நெருக்கடிகளின் மத்தியில் உருவான இச்சபை, புதுவையையும் தென்னிந்தியத் திரு அவையையும் புதிய மறுமலர்ச்சியின் பாதையில் வழிநடத்தி, அதன் வரலாற்றில் தலைமுறைகள் போற்றும் நீடித்த பங்களிப்பைச் செய்தது.

புதுவை மறைப்பணியில்  MEP சபை ஆயர்களின் அர்ப்பணிப்பும் மேய்ப்புப் பணிகளும்

1777-ஆம் ஆண்டு பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை புதுவை மறைப்பணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, தென்னிந்தியத் திரு அவை அமைதியான சூழலில் இல்லை. அரசியல் ஆதிக்கப்போட்டிகள், ஐரோப்பிய வல்லரசுகளின் மோதல்கள், போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதியப் பாகுபாடுகள் என எண்ணற்ற சவால்கள் மறைப்பணியின் பாதையைச் சூழ்ந்திருந்தன. ஆனால், அந்த இருண்ட சூழல்களிலேயே இறையருளை நம்பிக்கையாகக் கொண்டு பணியாற்றிய பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை ஆயர்கள், புதுவை மறைப்பணியின் அடித்தளத்தை உறுதிப்படுத்தியதோடு, அதன் எதிர்கால வளர்ச்சிக்கும் நிலையான திசையைக் காட்டினர்.

புதுவையை மறைப்பணியின் மையமாகத் தேர்ந்தெடுத்து பணியைத் தொடங்கிய ஆயர் பிரிகோ (1776-1791), புதுவை மிஷனின் முதல் தலைவராக வரலாற்றில் இடம்பெற்றார். மிகக் குறைந்த மறைப்பணியாளர்களுடன் பரந்த நிலப்பரப்பில் நற்செய்தியை எடுத்துச் செல்லும் கடினமான பொறுப்பை ஏற்ற அவர், அதிகார எல்லைப் பிரச்சினைகள், அரசியல் குழப்பங்கள் மற்றும் வெளிப்புற எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மறைப்பணியின் வேர்களை ஆழமாக ஊன்றினார். அவரது காலத்திலேயே புதுவை மிஷனின் நிர்வாக அடித்தளம் உருவாகத் தொடங்கியது.

அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆயர் ஷம்பெனுவா (1791-1810), பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், ஆங்கிலேயர்-பிரெஞ்சுக்காரர் மோதல்கள், திப்பு சுல்தானின் படையெடுப்புகள் போன்ற வரலாற்றுச் சூழல்களுக்கிடையில் மறைப்பணியை நிலைநிறுத்தினார். எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த மறைப்பணியாளர்களைக் கொண்டு தொலைதூரக் கிராமங்களையும் அடைந்து, இறைமக்களுடன் உயிரோட்டமிக்க உறவை வளர்த்தார். எதிர்ப்புகள் பெருகிய காலத்திலும் தளராத நம்பிக்கையுடன் பணியைத் தொடர்ந்த அவரது மனவுறுதி புதுவை மறைப்பணிக்கு உயிரூட்டியது.

ஆயர் ஹெபர்ட் (1810-1836) அவர்களின் காலம், மனிதநேயப்பணியின் பொற்காலமாக நினைவுகூரப்படுகிறது. காலரா, கொடிய பஞ்சம், வறுமை போன்ற பேரிடர்களால் துன்புற்ற மக்களின் நடுவே இறையன்பின் முகமாக வாழ்ந்தார். திரு அவையின் சொத்துகளையும், வழிபாட்டுப் பொருள்களையும் விற்று ஏழைகளின் பசியைத் தீர்த்த அவரது தியாகம், நல்ல மேய்ப்பனின் அர்ப்பணிப்பிற்கு அழியாத சான்றாகும். சாதிய வேறுபாடுகளால் பிளவுபட்ட சமூகத்தில் சமத்துவத்தின் விதைகளை விதைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.

புதுவை மறைப்பணியை வழிநடத்திய ஆயர் பொனான் (1836-1861) அவர்கள், அதன் வரலாற்றில் மறுமலர்ச்சியை உருவாக்கிய தொலைநோக்குப் பார்வையுடைய தலைவராகத் திகழ்ந்தார். இந்திய குருக்களை உருவாக்குதல், மறைப்பணி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துதல், அச்சகப் பணியைத் தொடங்குதல், மறைமாநிலப் பேரவைகளை நடத்துதல், கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துதல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் மறைப்பணிக்கு புதிய பரிமாணத்தை அளித்தன. அவரது காலத்தில் 1845-ஆம் ஆண்டு புதுவை, மைசூர், கோயம்புத்தூர் ஆகிய தனித்தனி மிஷன்கள் உருவாக்கப்பட்டதும், 1846-ஆம் ஆண்டு மதுரை மிஷன் மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டதும் நிர்வாக வரலாற்றில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. பெண்கல்வி, உள்ளூர் குருக்களின் உருவாக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றிலும் அவர் முன்னோடியான பங்களிப்பை வழங்கினார்.

ஆயர் கொதெல் (1861-1867) குறுகிய காலமே பணியாற்றியிருந்தாலும் கருணை, எளிமை மற்றும் ஏழைகளின் மீதான பேரன்பால் மக்களின் உள்ளங்களில் நிலையான இடம்பெற்றார். கல்விப் பணி, அனாதைகளின் பாதுகாப்பு, சமூகநலச் சேவைகள் ஆகியவற்றில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு மறைப்பணியின் மனிதநேய முகத்தை மேலும் வெளிப்படுத்தியது.

ஆயர் லவுணான் (1868-1892) அவர்கள், பொருளாதார நெருக்கடிகளும் சமூகப் பிரிவினைகளும் நிறைந்த காலத்தில் உறுதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். சமூக ஒற்றுமையையும் திரு அவை ஒழுங்கையும் வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்தன. 1886-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்நாள் திருத்தந்தை 13-ஆம் சிங்கராயரின் மனித மீட்பு (Humane Salutis) என்ற ஆணையின்படி, இந்தியாவில் கத்தோலிக்க ஆட்சிப்பீடம் நிறுவப்பட்டது. அப்போது புதுவை உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயராக உயர்த்தப்பட்ட அவர், புதுவைத் திரு அவையை புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் அழைத்துச்சென்றார். நீண்டகால அதிகாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திரு அவையின் எதிர்கால வளர்ச்சிக்காக உறுதியான அடித்தளத்தை அமைத்தார்.

பேராயர் காந்தி (1892-1909) அவர்கள், புதுவை உயர்மறைமாவட்டத்தின் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு இட்டுச் சென்றார். இந்தியக் குருக்களின் உருவாக்கம், கிராமப்புறக் கல்வி விரிவாக்கம், புதிய கிறித்தவக் குடியிருப்புகள், திரு இருதய ஆண்டவர் பக்தியின் பரவல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பணிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 1907-ஆம் ஆண்டு புதுவை திரு இருதய ஆண்டவர் ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டது அவரது ஆட்சிக்காலத்தின் மறக்க முடியாத நிகழ்வாகும். சாதிய மோதல்களும் சமூகப் பதற்றங்களும் தலைதூக்கிய காலத்திலும், அமைதி, ஒற்றுமை மற்றும் இறைநம்பிக்கையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் புதுவைத் திரு அவையின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

பேராயர் மோரெல் (1909-1930) அவர்கள், முதல் உலகப்போர், பொருளாதார நெருக்கடி, இந்திய விடுதலை இயக்கம், தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்ற கடினமான சூழ்நிலைகளில் மறைப்பணியை வழிநடத்தினார். 1918-ஆம் ஆண்டு மறைமாவட்டப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த அமைப்பை (DGS - Diocesan Organization of Schools) உருவாக்கியதும், 1921-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை நிறுவியதும் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாகும். துன்ப நேரங்களில் மறைப்பணியாளர்களை மக்களோடு இணைத்து, கல்வி, மருத்துவம், நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திய அவரது தலைமையால் திரு அவை மக்களின் நம்பிக்கையின் இல்லமாகத் திகழ்ந்தது.

பேராயர் கோலாஸ் (1930-1955) அவர்கள், புதுவை உயர்மறைமாவட்டத்தைத் தன்னிறைவு பெற்ற உள்ளூர் திரு அவையாக மாற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டார். இந்தியக் குருக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களைக் குருமடங்களில் சேர்த்தல், புதிய கல்வி நிறுவனங்களை நிறுவுதல், தரமான கல்வியை அனைவருக்கும் எட்டச் செய்தல் ஆகியவற்றில் அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது. 1932-ஆம் ஆண்டு கடலூரில் இளங்குருமடம் தொடங்கப்பட்டதும், 1934-ஆம் ஆண்டு புதுவை பெரிய குருமடம் பெங்களூருக்கு மாற்றப்பட்டு புனித பேதுரு குருமடமாக வளர்ச்சி பெற்றதும் அவரது காலத்தின் முக்கிய நிகழ்வுகளாகும். அவரது தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இந்தியக் குருக்கள் திருநிலைப்படுத்தப்பட்டனர். அருள்சகோதரிகளின் கல்வி, மருத்துவம், சமூகநலப் பணிகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் சவால்களைக் கடந்தும், கல்வி, சமூகநீதி, உள்ளூர் குருத்துவ வளர்ச்சி ஆகியவற்றிற்கு அவர் அமைத்த அடித்தளம், பிற்காலங்களில் புதுவை உயர்மறைமாவட்டத்தின் தன்னிறைவு வளர்ச்சிக்கான வலுவான தூணாக அமைந்தது.

MEP சபையின் ஆயர்கள் ஒவ்வொருவரும் தமது காலத்தின் சவால்களை வெறுமனே எதிர்கொண்டவர்கள் அல்லர்; மாறாக, இறைநம்பிக்கையின் ஆற்றலால் அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றிய தொலைநோக்குடைய மேய்ப்பர்கள். அவர்கள் விதைத்த இறைநம்பிக்கை, கல்வி, சமத்துவம், சமூகப் பொறுப்பு, உள்ளூர் குருத்துவ வளர்ச்சி ஆகிய உயரிய இலட்சியங்களே இன்று புதுவை உயர்மறைமாவட்டம் தன்னிறைவு பெற்று சிறந்து விளங்குவதற்கான உறுதியான அடித்தளங்களாகத் திகழ்கின்றன.