news
கவிதை
தீண்டல்

மலர்கள் மலர்ந்துகொண்டே

இருக்கின்றன!

மௌனமாய், அழகாய்

மலர்ந்துகொண்டே

இருக்கின்றன

அக்கினிப் பிழம்புச் சொற்கள்

அவற்றின் உரமாயின.

தீ நாக்கு மலர்களைச்

சுடுவதில்லை.

அம்மலர்களின் துயரம்

அவை பெற்ற

வடுக்கள் குறித்து அல்ல;

மலர்களை முத்தமிட்டுச் செல்லும்

வண்ணத்துப் பூச்சிகளுடன்

கைகோர்த்து

உயரப் பறக்க விடாமல்

தடுக்கும் வேர்கள் குறித்துதான்.

ஆனால் வேர்களினின்றி மலர்களில்லையே!

அம்மலர்கள் மௌனமாய்,

அழகாய் மலர்ந்துகொண்டே இருக்கின்றன

வண்ணத்துப்பூச்சியின்

அடுத்த தீண்டலை எதிர்பார்த்து!

news
கவிதை
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கற்பா!

கத்தோலிக்கத்

திரு அவையின்

உரோமை ஆயனே!

 

உலகத் திரு அவையின்

நல் தகப்பனே!

அன்பால் வென்ற

அருள்திருவே!

அகிலத்தை அன்பால்

அணைத்தாயே!

 

கல்வியில் சிறந்திட

வேதியியல் பயின்றவரே !

இறைவன் நிகழ்த்திய

வேதியியல் மாற்றத்தால்

இறையியல்

கற்றுத் தெளிந்தீரே !

வேதியியலும்

இறையியலும் கலந்த

ஒரு படித்தான கலவையாய்

மாற்றம் மண்ணில்

விதைத்தீரே !

 

மரபுகளை உடைத்து

மனிதத்தை வென்றாயே!

மனிதர் வாழ

வழி பல சொன்னாயே!

எளிமையின் வடிவாய்

எளியோரின் தோழனாய்

ஏழ்மை நீக்கச்

சொன்னாயே!

 

புலம்பெயர்வோர்

இடர் நீக்க

போர்கள் இல்லா

பூமி காண

மண்டியிட்டுச் செபித்து

நாடாளுவோரின்

இதயம் திறக்கச் செய்தாயே!

 

வத்திக்கான் தலைவரே

விந்தைகள் நிகழ்த்திய

வித்தகக் குருவே!

உலகாளும் மாந்தரெல்லாம்

உம்முன் பணிந்து நின்றாரே!

ஆசிர் வேண்டி பணிந்தாரே!

 

வெள்ளை ஆடை வேந்தனே!

வேற்றுமை பாரா புனிதனே!

திரு அவையின் தவறுக்கு

தந்தை நிலையில்

பொறுப்பேற்று

ஒப்புரவு பெற்றீரே!

உண்மையை

உரக்கச் சொல்லி

உத்தம குருவாய்

வாழ்ந்தீரே!

 

அன்னை மரியின் அன்பனே

அருள்பணியின் காவலனே

அர்ப்பண வாழ்வை வாழ்ந்தவரே

இளைப்பாறட்டும்

உம் ஆன்மா

இறைவனின் இல்லத்தில்

புனித நிலை காத்த

புண்ணியனே

புனிதராய் உயர்ந்திட

இறையருள்

வேண்டுகிறோம்!

news
கவிதை
எழுந்து வா எந்தையே, எம் திருத்தந்தையே!

எம் திருத்தந்தையே

உம் பெயர்தான் புரட்சியா?

புரட்சிதான் பிரான்சிசா

திருத்தந்தை  பிரான்சிசா! 

திரு அவை பீடத்தில்  

ஆட்சி மன்றத்தில்

புதுமை புகுத்தினாய்

புரட்சி செய்தாய்! 

பெண் இனமும்   

தலைமையேற்க

பார் போற்ற

வியக்க வைத்தாய்! 

பொது நிலையினரை

அரவணைத்தாய்

ஆட்சி மன்றத்தில்

அமர வைத்தாய்! 

உன் முகம் காண

நேரிலே காண

ஒருமுறை காண

காத்திருந்தோமே! 

கண்டம் விட்டு

கண்டம் பறந்தாய்!

இந்தியத் துணைக்கண்டம்

ஏன் மறந்தாய்?

போர் நிறுத்தம்

உன்  உயிர் மூச்சு

காசாவில் போர் 

நின்றது உன் மூச்சு 

உக்ரைன் போர் 

நிறுத்திடத் துடித்தாய்!

நிறுத்திடும் முன்னே  

உன் துடிப்பை நிறுத்தினாய்!  

யூபிலி ஆண்டு

தொடங்கி வைத்தாய்!

முடித்து வைக்குமுன்

ஏன் சென்றாய்?

அறியவில்லை நாங்கள்

உயிர்ப்புப் பெருவிழாவன்று  

மரணப்  படுக்கையிலிருந்து

எழுந்து வருவாயென்று

அறிவோம் நாங்கள்

உயிர்ப்புப் பெருவிழா

அடுத்து வருவது

விண்ணேற்புப் பெருவிழா!

அறியவில்லையே

நாங்கள்  

உயிர்ப்புப் பெருவிழாவன்று  

எம்மிடையே வந்த நீ

உடன் விண்ணகம் செல்வாயென 

உனது எளிமையை  

இனி எங்குத் தேடுவோம்?

உன் சிரித்த முகத்தை  

இனி என்று காண்போம்?

எழுந்து வா எந்தையே!

சிறிது காலம் மட்டும்

இருந்து போ

எம்மிடையே

எம் திருத்தந்தையே!

news
கவிதை
திருத்தந்தையே திரும்பி வாரும்! திரு அவையில் திருத்தங்கள் தாரும்!

திருத்தந்தையர்களில்

நீர் ஒரு திருப்புமுனை!

 

ஏழைகளுக்காகப்

போராடிய போராளியே!

ஏழைகளை நேசித்த

இயேசுவின் தாசரே!

மரபுகளை உடைத்தெறிந்த

மகாத்மாவே!

 

பெண்ணியம் போற்றியதோடு

ஆட்சிப்பீடத்தில்

அதிகாரம் கொடுத்த

அருள் வள்ளலே!

 

எளியோரின் நலனில்

இயேசுவாகவே வாழ்ந்தீரே!

சுவாசம் உள்ளவரை

ஏழைகளைச்

சுவாசித்த சுதனே!

 

முதியவர்களைச் சுமையாகக் கருதியவர்கள்

மத்தியில்

தாத்தா-பாட்டி

தினமாகக்

கொண்டாட வழிவகுத்தீரே!

 

ஏழைகளுக்காக

உதித்த உதய சூரியனே!

 

கூட்டொருங்கியக்கத்

திரு அவையின்

கொள்கைத்

திறவுகோலே!

 

மனிதமே புனிதம் என்பதனை

மானுடத்திற்குச் சொல்ல வந்த

மகா காவியமே!

 

பெண்களின்

பாதங்களைக் கழுவிய

பெருந்தகையாளரே!

 

விளிம்பு நிலை மக்கள்

வெளிச்சம் பெற வந்த விடியலே!

 

சிறையில் இருப்போரையும்

சிநேகித்தவரே!

 

உலகில் அமைதி நிலவ

அதிபர்கள் காலில் விழுந்த

திருத்தந்தைகளில்

நீர் ஓர் அதிசயமே!

 

என் சீலைகளைத் தவிர்த்து

ஏழைகளுக்கு உதவ

ஒப்பனை அறைகள்

கட்டப் பணித்தவரே!

 

இரக்கம் நிறைந்தவர் என்பதாலோ

இறை இரக்க ஞாயிறு(க்)குமுன்

இரக்கமிக்க ஆண்டவர் அழைத்தாரோ!

திரு அவையின்

திருப்புமுனை

திருத்தந்தையே!

திரும்பி வாரும்!

(சீர்)திருத்தம்

தாரும்!

news
கவிதை
உலகம் உய்ய செபித்தவரே!

எமதருமை திருத்தந்தையே!

உலக மாந்தரை நேசித்தவரே!

உலகத் தலைவரைச் சந்தித்தவரே!

உலகினர் உள்ளங் கவர்ந்தவரே!

பாவம் வெறுக்க பரிந்துரைத்தவரே!

பாவப்பரிகாரம் புரிய சொன்னவரே!

அனைவரையும் ஈர்க்க முயன்றவரே!

அனைத்தையும் தாழ்ச்சியுடன் ஏற்றவரே!

சமாதானம் நிலைக்கப் போராடியவரே!

சமத்துவம் காணத் துடித்தவரே!

சிறாரைக் கனிவாய் அணைத்தவரே!

சிறார் கொடுமை சாடியவரே!

குறையுள்ள யாவரையும் நேசித்தவரே!

குறையில்லா வாழ்வு வாழ்ந்தவரே!

திருப்பயணிகளாக்கித் திருப்பயணமானவரே!

வருடமொரு ஒன்றிப்பை நல்கியவரே!

வல்ல இறைவனால் வழிநடத்தப்பட்டவரே!

இந்திய நாடு காணாத பேரன்பரே!

இந்திய மக்களைக் காண ஏங்கியவரே!

நம்பிக்கை தரு நல்வாக்கினரே!

நம்பி வரும் எளியோர் பாதுகாவலரே!

ஓரங்கட்டப்பட்டோரின் நண்பரே!

ஓரிடம் நில்லாது சுற்றிச் சுழன்றவரே!

போர்களை நிறுத்தப் போராடியவரே!

வேர்களை உறுதியாக்கச் சிந்தித்தவரே!

உம் விழுமியங்களை வாழ்வாக்குவோம்!

உம் நற்செயல்களை நாளும் நினைப்போம்!

உம் ஆன்மா இறைவனில் இதம் காண

தொடர்ந்து செபிக்கிறோம்!

 

news
கவிதை
கவிதைச் சாரல்

உயிரோடு  இருக்கையில்

செல்லமாய் செல்வமாய்

உரிமையில்  பதவியில் 

ஆயிரம் பெயர்கள் !

உணர்வற்றுப் போய் உயிர் பிரிந்திடின்

ஒற்றைப்பெயரில்  உலவும்  உயிர் சுமந்த உடல்

பிணமென்று!

 

வல்லினம் மெல்லினம்

கலந்த இடையினமே அவள்!

கொஞ்சம் கண்ணீரும்

கெஞ்சும் குறுநகையும்

பூக்கும் புன்னகையும்

உயர்ந்த பெண்மையின்

உன்னதத் தாய்மையின்

உரு தரும் அடையாளமும்

உருவாக்கும்

உறவுக் குழாமும்

பெண்மையின்

பெரும் பேறே!

 

ஆயிரமாயிரம் வரிகள்!

பாயிரந்தோறும்

பொருந்தும் கவிகள்!

வாசல் தோறும் பொருந்தாத

தோரணங்களாய்

வீணில் திரியும்

விட்டில்பூச்சிகளாய்

விலை கொடுத்து

வாங்கி விலையில்லாமல்

விலை போகும் மனிதர்கள்!

தேர்தலுக்கு முன்னும்

தேர்தலுக்குப் பின்னும்!

 

சில தடங்களும்

பல தழும்புகளும்

அழித்திட இயலாதவை!

ஆற்றிட ஆறாதவை!

அதை நம்மிடம்

விட்டுச் சென்றவர்களின்

அழுத்தங்களே

அதன் வலிக்கோட்பாடு!

 

மின்மினிப் பூச்சிகளின்

மினுக்குகள் அல்ல நீ!

கண்மணி சொடக்குகளின்

அசைவுகள்  அல்ல நீ!

ஏய்க்கப்படுகிறாய்  என்பதை

அறியாப் பத்தரையாய் நீ

பயணிப்பதில் பயனேதும் உண்டோ?

முத்திரை பதிக்கும்

சித்திரைப் பூவாய் தரைக்கும் தாலிக்கும்

தொடர்பென்றே தூர நிறுத்தும்

தரையர்களைத் தரைமட்டமாக்கிடத்

துணிந்து வா பெண்ணே!

 

எல்லாம் ஆனவனையும்

ஆணாய்க் கருவில் தரித்துக்

கனியாக்கியக் கன்னியவள்!

யாதுமாய் யார்க்கும்

யாத்தும் தாயுமானவள்!

பிரபஞ்சப் புள்ளியின்

உட்கருவாகி உருவாக்கி

உரு தந்து உருக்குலைந்து

புது உரு ஏற்கும் உலகின்

இயக்கச் சக்தி அவள்!

அவளின்றி அவனசையான்!

பெண்மையைப் போற்றுவோம்!

 

மறையும் நிலவைத் தேடி

மறையாத வானோடு

மற்போர் புரிகிறது

மேகக் கூட்டங்கள்!

 

வரிகள் இல்லா வலிகள்!

உடையிலும் நடையிலும்!

மானம் காப்பதற்கே!

தானம் வாழ்வதற்கே!

 

எல்லைகள் தாண்டிடத்

தொல்லைகள் மீறு!

 

இலக்கு மறவாமல்

ஓடுபவனுக்குப் பல வழிகள்!

துரத்துபவனுக்கு ஒரே வழி!

வழிகள் மாறலாம்!

இலக்கு மாறாது!