news
கவிதை
அமைதி பிறக்கட்டும்!

குரல் எழுப்பு...

உரிமைகள் மறுக்கப்படும்போது!

உடைமைகள் சூறையாடப்படும்போது!

உணர்வுகள் காயப்படும்போது!

உண்மைகள் புதைக்கப்படும்போது!

 

குரல் எழுப்பு...

நீதி சாகடிக்கப்படும்போது!

ஆள்பலம் ஒன்றுசேரும்போது!

மனிதர்கள் தாழ்த்தப்படும்போது!

மனிதனை மனிதனே

மதிக்காதபோது!

 

உரக்கக் குரல் எழுப்பு...

உன் எதிரொலி

எளியவருக்கு இரங்கட்டும்!

வாழ்விழந்தவர்களுக்கு

வாழ்வாகட்டும்!

அடிமைகளுக்கு விடுதலையாகட்டும்!

நானிலமெங்கும் அமைதி பிறக்கட்டும்!

news
கவிதை
கவிதைச் சாரல்

எனது முகத்தில்

எழுதப்படுகிறது

அவ்வப்போது

உங்கள் முகங்களின்

முகவரிகள்!

துடைத்துக்கொள்கிறேன்

அடிக்கடி

மனித அழுக்கின்

கறைகளை!

இப்படிக்குக் கவிதை!

 

எளிதில்

எல்லாரையும்

மன்னியுங்கள்!

எளிதில் யாரையும்

நம்பாதீர்கள்!

உண்மையாக

நேசியுங்கள்!

உரக்கச் சிந்தியுங்கள்!

சத்தமாகச்

சிரியுங்கள்!

சுத்தமாகச்

சுவாசியுங்கள்!

சுயமாக

யோசியுங்கள்!

ஆழ்ந்து செபியுங்கள்!

தீரத்தோடு

துணியுங்கள்!

தீர்ந்த பிறகும்

நம்புங்கள்!

நன்றாக வாழுங்கள்!

 

இல்லாத ஒன்றிற்காய்

மாளிகை மாடங்களும்!

விண்முட்டும்

கோபுரக்

கலசங்களும்!

குடியிருக்க

இல்லையொரு வீடு!

மானங்காக்க

இல்லையொரு

கோவணம்!

 

அதனாலென்ன?

கொடுத்தது நாடாகவும்

உடுத்துவது

நிர்வாணமாகவும்தான்

இருந்துவிட்டுப் போகட்டுமே!

அதனால் என்ன?

 

உன்னைச் சுற்றி இருக்கும்

தடைகளைவிட

உனக்குள்ளே இருக்கும்

திறன்

ஆற்றல் மிக்கது!

news
கவிதை
கவிதைச் சாரல்

களிப்பதுமில்லை!

கண்ணீரில்

நனைவதுமில்லை!

ஆர்ப்பதுமில்லை!

கோர்ப்பதுமில்லை!

அடங்குவதில்லை!

அடக்குவதுமில்லை!

வார்த்தைத் தூரிகைக்

கொண்டு

பரந்து விரிகிறது!

கவிதை வானம்!

 

உரக்கச் சொல்ல

முடியவில்லைதான்!

சில வலிகளையும்!

துடைக்கத் துடைக்கப்

பெருகும் கண்ணீருக்கான

காரணங்களையும்!

ஆனாலும்

உருகிப் போகிறோம்

வாழ்வின் நுட்பங்களில்

இறைவன் நமக்கென்றே

ஒளித்து வைத்திருக்கும்

இரசனைகளை நம்பியவாறே!

 

மௌனமும் நிசப்தமும்

மையம் கொள்ளும்

இடத்தில் எல்லாம்

யாரோ ஒருவரின்

யாரோ ஒருவர் மீதான

நம்பிக்கை

கொல்லப்பட்டிருக்கிறது

என்பதே பொருளாகும்!

 

ஆழ அடி தோண்டிட

வேலையாள் போதும்

அழகாய் வடிவமைக்க

நிபுணர்கள் வேண்டும்!

கல்லை உடைக்க

அடிமைகள் போதும்!

ஆனால்,

சிற்பங்களை

வடிவமைக்க

சிற்பிகள்தான்

வேண்டும்!

அவரவர் தனித்துவமே

கடவுளின் மகத்துவம்!

 

உங்களை

நியாயப்படுத்த

பிறரைக்

காயப்படுத்தாதீர்கள்!

news
கவிதை
திரு இருதய பக்தி!

ஏராளப் பாவங்கள்  மண்ணுலகில் பெருகியதால்

இறைவனே நீர் இதயம் நொந்தீர்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனுக்குலத்தை

ஏந்தியே காக்க வந்தீர் - மனிதர்

எண்ணங்க ளத்தனையும் நம்பிக்கைத் துரோகமாகச்

சிலுவையிலே உயிரைத் தந்தீர் - உம்

இருதயம் முழுக்கவே வலிகள்தாம் எம்மாலே

இன்னலன்றி எதை நீர் கண்டீர்?

 

எது எதையோ அடைவதற்கு தீய வழி என்னவென்று

மனிதர்கள் யாம் இங்கு ஆய்கிறோம் 

இறுகிப்போன சுயநலத்தால் நன்மைகளை விற்றவராய்

பாவ நெருப்பில் குளிர் காய்கிறோம்

எப்படியோ பொருள் சேர்த்துக் கொடிகட்டிப்  பறந்தவராய் 

ஆன்மாவை இழந்து தேய்கிறோம்

ஈட்டியதைக் கூட்டிப் பார்த்து இறுதியிலே சுழியம் கண்டு

இழந்த வாழ்வை எண்ணி மாய்கிறோம்

 

பண்பு கெட்டு நாங்கள் செய்யும் பாவங்கள் எல்லாமே

உம் இதயத்தில் முட்கள் செருகும்

பரமன் உம்  திரு இதயம் பாதிப்புக்குள்ளாகி

இடைவிடா(துகுருதி யொழுகும்

பரிசுத்தத்தனத்தை விட்டுப்  பாதை மாறி நடந்தாலும்      

மன்னித்து இரக்கம் பெருக்கும் - உம்

பாசமதை உணராமல் பாழும் எம் நெஞ்சங்கள்

பாறைபோல் தினமும் இறுகும்!

  

நன்றியில்லா நடத்தை மிக

                     நாளும் பாவ முட்களினால்

நெஞ்சத்தையே குத்திப் பிளந்தோம்

நல்லவராம்  ஆண்டவர் நீர் 

                மன்னித்  தருள்வதனால்

நாங்களுமே வாழ்வை அடைந்தோம்

என்றும் இயேசு திரு இதயப்

                பக்திப்பற்று மிகக்கொண்டு

வணங்குவோருக்கு உயர்வு நிச்சயம்!

இறைவா! நீர் எமக்குச் செய்த நன்றி

                          நினைத்து நடந்தாலே            

எமக்கு நல் வாழ்வுண்டு, இதுவே சத்தியம்!

                          *சுழியம் - பூஜ்யம்

news
கவிதை
கவிதைச் சாரல்

கைதூக்கி விட யாருமில்லை

என்பதாலோ

அங்கீகரிக்க மறுக்கிறார்கள்

என்பதாலோ

உன் தனித்துவம்

மறையப் போவதில்லை!

அமுதாய் ஊறும்

உன் திறன்களைத் தள்ளிட

யாராலும் இயலாது!

 

அஞ்ஞானம் 

அடிமைப்படுத்துகிறது

ஞானம்

அடங்கிப்

போகின்றது!

 

வலியது என்றே

வட்டமடித்துக்

கொள்கின்றன

கழுகும் காகமும்!

 

கடினமான சூழல்தான்

வலிமையான

ஆளுமைகளைப்

பிரசவிக்கும்!

 

பயன்தராத

செல்வம் விற்றுப்

பயன்தரு

கல்வி கற்கப் பின்

பயன்தரும்

கல்வியை விற்றுப்

பயனுறு செல்வம்

சேர்ப்பதும்

சேர்த்தலின்

சுழற்சியோ?

 

கான்கிரீட் காடுகளில்

மரிக்கிறது

புல் பூண்டுகளும்

காடு கழனிகளும்!

சிலரின் வறண்ட

கரடு முரடான

இதயங்கள் போலே!

 

உன்மீது வீசப்படும்

கல்லைச்  சிலையாக்கு!

சொல்லை வில்லாக்கு!

வானம் வசப்படும்!

 

பேசத் தெரியாத

காலமும் பேசும்!

பேசத் தெரிந்த

பலவற்றிற்கும்

பதில் சொல்வது

காலமே!

 

மலைமுகடும்

மழை மேகமும்

உணர்த்தும்

மித வேகத்தின் 

மழை மேகத்தின்

உயரத்தை!

 

பதக்கங்களும்

புத்தகங்களும்

பட்டயமும்  கேடயமும்

சான்றிதழும்

சன்மானமும்

மீண்டும் மீண்டும்

சிலருக்கே எனும்போது

அதன் நம்பகத்தன்மை

மதிப்பிழந்து போகிறது!

 

முத்துகள்

முந்துவதில்லை!

நிறைகுடம் ததும்பாது!

தன் நிழல் அறியா

ஆலயக் கலசங்களாய்

ஆயிரமாயிரம் பேராமே!

 

நம் நிஜங்கள்

தோற்கும் இடத்தில்

நம் நிழல் கூட

மண்டியிடக் கூடாது!

நம் உண்மை நிலை

தோற்கும் இடத்தில்

நம் பொய் முகம்

ஒன்றும்

ஜெயிக்கப் போவதில்லை!

news
கவிதை
அலையாய் எழு!

நிலவினில் குளிக்கிறாய்!

கரைதொடத் தவிக்கிறாய்!

முயன்று முயன்று

வெண்மையாய் நுரைக்கிறாய்

கடலலையே!

கலையாக் காவியமாய்

மனமதை நிறைக்கிறாய்!

மன்மதன் எய்ததினால்

வான்மதகையே சுமக்கிறாய்!

தென்றலை இரசிக்கிறாய்!

மெல்லலை விரிக்கிறாய்!

சிந்தை கலங்கிட

மலையென உயர்கிறாய்!

கல்லான மனத்திலும்

கனாக்களை விதைக்கிறாய்!

நீந்திடும் மீனினம் கரை சேரவா

அலையாய் அலைகிறாய்?

பிரிய மனமில்லாமல்

நீண்டே திரிகிறாய்!

நிலவெனும் தாரகை நின் தாழ்

நீந்தி மகிழ்கிறாள்!

மின்னிடும் விண்மீன்களும்

கண்ணிமைக்காது பார்க்கும்

உன்னழகையே...

குழவியின் தீண்டலாய்

கரைதனைத் தொடுகிறாய்!

நொடிக்கு நொடி

மனம் ஆயிரம் பேசும்...

நீ உடைந்து மறைவது போல்

மறந்தும் போகும்...

மிதந்திடும் தோணியாய்

வாழ்க்கையும்....

உன்போல் கரைசேர

முயன்றதால்

கண்ணீரின் சுவையும்

உன்னினமே!

அலைகளின் படிகளில்

நடந்திட வா!

நடந்தே வானமும் கடந்திட வா!

தொடுவானம் உந்தன் எல்லைதானோ?

எழுந்து வா!

இனி உன் நாள்!

எல்லாம் உன்னால்!