தவக்காலத்தின்
உயிர்நாடியாக விளங்கும் மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் ஆகிய உயரிய சிந்தனைகளை அசைபோட இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடந்த ஞாயிறன்று பாலைநிலத்தில் சோதனைகளைச் சந்தித்து, உருக்குலைந்த நிலையில் நின்ற இயேசுவைச் சந்தித்த நாம், இன்று தாபோர் மலையில் மாட்சிமையுடன் உருமாறி நிற்கும் இயேசுவைச் சந்திக்கிறோம்.
பாலைநிலத்தில்
நாற்பது நாள்கள் நோன்பிருந்த இயேசுவிடம், ‘அதிகாரம் மற்றும் செல்வாக்கு’ போன்ற
குறுக்கு வழிகள் மூலம் தம்மை எளிதாக உருமாற்றிக்கொள்ள முடியும் என ஆசை காட்டிய
அலகையின் மாய வழிகளை மறுத்த இயேசு, பாடுகள் மற்றும் மரணம் என்ற இடர்ப்பாடுகள் நிறைந்த பாதையின் வழியாகவே உண்மையான மாட்சி பிறக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார் (மத் 16:25). இயேசுவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, மனந்தளர்ந்து போயிருந்த சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும், ‘சிலுவைப்பாதையே சீடத்துவத்தின் வழி’ என்பதை உறுதிப்படுத்தவும் நிகழும் மாபெரும் அடையாளமே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் இயேசுவின் தோற்ற மாற்றம்.
மாற்றம்
என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல, அது இறைவனின் விருப்பமும்கூட. மாற்றம் எப்போதும் ஒரு வலியோடுதான் தொடங்குகிறது. நமக்குப் பழகிப்போன வசதியான வாழ்வை விட்டு வெளியேறுவது கடினம் என்பதால், நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் தயங்குகிறோம். மாற்றம் என்பது தேக்கநிலையை உடைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு பயணம். இது வெறும் வெளிப்புற அலங்காரம் அல்ல; அது உட்புற உருமாற்றம். இன்றைய வாசகங்கள் நமக்கு ஒரு ‘மலைப்பயணத்தை’ முன்
வைக்கின்றன. மலை என்பது இறைவன் வாழும் இடம்; மலையுச்சி என்பது இறைவனைச் சந்திக்கும் இடம். அங்கே பழைய இயல்புகள் களைந்து, புதிய மனிதராக நாம் உருமாற அழைக்கப்படுகிறோம்.
இன்றைய
நற்செய்தியில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கொண்டாடும் நாம், முதல் வாசகத்தில் ஆபிரகாமின் வாழ்விலும் ஒரு பெரும் மாற்றத்தைக் காண்கிறோம். பொதுவாக, இளம்வயதில் மாற்றங்களைச் சந்திப்பது எளிது. ஆனால், வேரூன்றிப் போன முதுமையில் மாற்றங்களை ஏற்பது என்பது பெரும் மனப் போராட்டம். ஆபிரகாம் தன் ஊரைவிட்டுப் புறப்பட ஆண்டவர் அழைத்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. வாழ்க்கையின் அந்திமத்தில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில், பழகிய இடங்களை விட்டுவிட்டு முன்பின் தெரியாத நாட்டிற்குப் போகச் சொல்வது ஒரு மனிதருக்கு எத்தகைய தயக்கத்தை உருவாக்கியிருக்கும்? இன்றைய உலகிலும், முதிர்ந்த வயதில் புதிய சூழல்களுக்குத் தள்ளப்படும் முதியவர்களின் மனவலியை ஆபிரகாமின் இந்தத் தொடக்ககாலப் போராட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.
வாழ்க்கை
என்பது ஒரு வசதியான இடத்தில் தங்குவதல்ல; மாறாக, இறைவனுக்காகத் தொடர்ந்து நகர்வது. ஆண்டவர் ஆபிரகாமிடம் மூன்று கடினமான தியாகங்களைக் கேட்கிறார்: அ) தன் நாடு,
ஆ) தன் இனம், இ) தன் தந்தை
வீடு. நாடு ஒருவரின் பாதுகாப்பையும் பற்றையும், இனம் ஒருவரின் சுற்றத்தாரையும் உறவையும், தந்தை வீடு ஒருவரின் அடையாளத்தையும் உரிமையையும் குறிக்கின்றது. ஆபிரகாமின் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் இந்த மூன்றும்தான் ஒரு மனிதரின் முகவரி. ஒருவரின் உரிமைகளும் உறவுகளும் இதைக்கொண்டே அளவிடப்படுகின்றன. ஆபிரகாமுக்குக் கடவுள் வழங்கிய கட்டளைகள் கடினமாக இருந்தபோதிலும், அவரது ஆழமான கடவுள் அனுபவம், தெரியாத பாதையிலும் அவரைத் துணிவுடன் நடக்க வைத்தது.
ஆபிரகாம்
தனது அடையாளங்களை, முகவரியை இழந்தார்; இறைவனின் அடையாளமாக, முகவரியாக மாறினார். ஆபிரகாம் எதை இழந்தாரோ, அதைவிடப் பன்மடங்கு மேலானவற்றை ஆண்டவர் அவருக்கு வாக்களிக்கிறார். ஆபிரகாமின் கீழ்ப்படிதலால் அவர் நான்கு ஆசிகளைப் பெறுகின்றார். அவை: அ) பெரிய இனம்,
ஆ) ஆசி, இ) சிறப்புற்ற பெயர்,
ஈ) நீயே ஆசி. நாம் இறைவனுக்காக நம்மையே இழக்க முன்வரும்போது நாம் கேட்காமலேயே பன்மடங்கு பேறுபலன்களைப் பெறமுடியும் என்பதை ஆபிரகாம் நமக்கு நினைவூட்டுகின்றார். “நீயே ஆசியாக விளங்குவாய்” (தொநூ
12:2) என்பது திருவிவிலியத்திலேயே மிகவும் தனித்துவமான ஓர் அழைப்பு. ஆபிரகாம் ஆசியைப் பெறுபவர் மட்டுமல்லர், அவர் ஆசியாகவே மாறுகிறார்.
ஆபிரகாமின்
‘புறப்பாடும்’ இன்றைய
நற்செய்தியில் இயேசுவின் ‘தோற்ற மாற்றமும்’
வெவ்வேறு காலங்களில் நடந்தாலும், இவை இரண்டும் ‘இழத்தல் மற்றும் பெறுதல்’ என்ற ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. ஆபிரகாம் தன் வசதிகளைத் துறந்து, ஒரு தெரியாத நிலத்தை நோக்கிப் பயணிக்கத் துணிந்தபோதுதான் ஒரு பெரிய இனத்தின் தந்தையாக உருமாறினார். அதுபோலவே, இயேசுவும் பாடுகள் மற்றும் சிலுவை மரணம் என்ற வேதனை நிறைந்த பாதையை ஏற்கத் துணிந்தபோதுதான், தாபோர் மலையில் ஒளிமயமாக உருமாறினார். ஆபிரகாம் தன் ‘அடையாளங்களை’ இழந்தார்.
இயேசு தம் ‘உயிரையே’ இழந்தார். தன்னிலை மாறத் துணியாத எவரும், தெய்வீக ஒளியைப் பிரதிபலிக்க முடியாது. ஆபிரகாம் ஆசியாக மாறியது போல, நாமும் சிலுவையைச் சுமக்கத் துணிந்தால் மட்டுமே, மாட்சிமையின் ஒளியாக உருமாற முடியும் என்பதே இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் ஒருவரிச் செய்தி.
இன்று
ஆசி மற்றும் பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரணான உறவே கிறித்தவ வாழ்வின் மிகப்பெரிய சவால். நாம் ஆசியை விரும்புகிறோம்; ஆனால், அதை நோக்கிய கடினமான பயணத்தைத் (சிலுவையை) தவிர்க்க நினைக்கிறோம். இந்த மனப்போராட்டத்தைச் சீடர்களின் வாழ்விலும் வார்த்தையிலும் தெளிவாக அவதானிக்க முடிகிறது. இயேசு தம் சாவைப் பற்றி முதன்முறை முன்னறிவித்தபோது (மத் 16:21) சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, பேதுரு “ஆண்டவரே, இது வேண்டாம்; இப்படி உமக்கு நடக்கவே கூடாது”
(16:22) என்றார். பேதுரு இன்பமான, பாதுகாப்பான சூழலிலேயே தங்கிவிட விரும்பினார் (17:4). கீழே காத்திருக்கும் சிலுவை, பாடுகள் மற்றும் மரணத்தைச் சந்திக்க அவர் அஞ்சினார். அவர்களுக்கு மெசியா என்பவர் ‘வெற்றி வீரராக’ மட்டுமே தெரிந்தார்; ‘துன்புறும் ஊழியனாக’ தெரியவில்லை. அவர்கள் ‘மாட்சிமை’
இயேசுவை விரும்பினார்கள்; ‘உருகுலைந்த’ இயேசுவை
அல்ல.
நம்முடைய
இயல்பும் சீடர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதை உணரலாம். ஆசிகள் கிடைக்கும்போது அவ்விடத்திலேயே தங்கிவிடத் துடிக்கும் நாம், அந்த ஆசியைப் பெறுவதற்காகக் கடக்க வேண்டிய போராட்டங்களைக் கண்டு பின்வாங்குகிறோம். இழப்பு இல்லாமல் ஆசி இல்லை. ஆபிரகாம் ஆசியாக மாறியது, அவர் தன் நாடு, இனம், தந்தை வீடு என்ற தன் முழு முகவரியையும் இழந்ததினால் கிடைத்த பேறு! கைகள் காலியாக இருந்தால்தானே புதிய பரிசைப் பெறமுடியும்!
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் முன்வைக்கும் அழைப்பும் “நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்”
(திமொ 1:8) என்பதே. துன்பத்தை ஒரு சுமையாகப் பார்க்காமல், ‘கடவுளின் வல்லமை’ வெளிப்படும் களமாகப் பார்க்க நம்மை அழைக்கிறார். பவுல் குறிப்பிடுவது போல, கிறிஸ்து சாவு என்ற அதிகாரத்தை அழித்துவிட்டு, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிர்வித்தார். அந்த ஒளியைப் பிரதிபலிக்க வேண்டுமென்றால், நாம் கிறிஸ்துவின் துன்பத்திலும் பங்குகொள்ளவேண்டும். துன்பத்தில் பங்கெடுப்பது என்பது முடங்கிப்போவதல்ல; மாறாக, ஆபிரகாமைப் போலப் புறப்படுவதும், சீடர்களைப் போலப் பாதுகாப்பான கூடாரங்களை விட்டு வெளியேறுவதும், பவுலைப் போல நற்செய்திக்காகத் தியாகங்களைச் செய்வதும் ஆகும்.
இன்றைய
இந்த மலைப்பயணம் நமது வாழ்விற்கான மூன்று மாபெரும் உண்மைகளை உணர்த்துகின்றன: ஒன்று, துணிந்து புறப்படுவோம். ‘வயதாகிவிட்டது, சூழல் சரியில்லை’
என்ற சாக்குகளைத் தவிர்த்து, இறைவனின் அழைப்பு வரும்போது மாற்றத்தை நோக்கி முதலடியை எடுத்து வைப்போம். நமது இதமான சூழலை (comfort zone) விட்டு வெளியேறும்
அந்தப் புள்ளியில்தான் இறைவனின் ஆசி தொடங்குகிறது.
இரண்டாவது,
கூடாரம் அமைக்காதிருப்போம். வாழ்வின் தற்காலிக வெற்றிகளிலோ, வசதிகளிலோ திருப்தி அடைந்து அங்கேயே தங்கிவிடாமல், ஆன்மிக வாழ்வு என்பது ஓர் இடைவிடாத பயணம் என்பதை உணர்வோம். மலையுச்சியில் பெற்ற ஒளியை மக்களிடம் கொண்டு செல்ல, மீண்டும் சமவெளிக்கு இறங்கி வந்து பணியாற்றுவதே உண்மையான சீடத்துவம்.
மூன்றாவது,
துன்பத்தை ஒளியாக்குவோம். துன்பத்தைக் கண்டு அஞ்சாமல், நற்செய்திக்காக நாம் ஏற்கும் அவமானங்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்போம். சிலுவையின் நிழலில் உறுதியாக நின்றால் மட்டுமே மாட்சியின் ஒளியைக் காண முடியும். ஆபிரகாமின் மாற்றமும், இயேசுவின் மாட்சியும், பவுலின் மன உறுதியும் நம்மை
வழிநடத்தட்டும்.