வாழ்வு
என்பது கடவுள் நமக்குக் கொடுத்த உன்னதமான கொடை! ஒவ்வொரு நாளும் புதிய விடியலையும், புதிய நம்பிக்கையையும் நோக்கி நாம் மகிழ்ச்சியோடுதான் நம் பயணத்தைத் தொடங்குகிறோம்.
இன்றைய
நவீன உலகம் நமக்கு அடுக்கடுக்கான வசதிகளையும், கண்ணிமைக்கும் நேரத்தில் உலகையே நம் கைகளில் காட்டும் வியத்தகு தொழில்நுட்பங்களையும் அள்ளித் தந்துள்ளது. மனித ஆற்றலும் அறிவியலும் உச்சம் தொட்டிருக்கும் ஒரு பொற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், இன்றைய எதார்த்த சூழலில் இந்த அதிவேக ஓட்டத்திற்குப் பின்னால், மனித இதயம் ஏதோ ஒரு திசையறியாத் தவிப்பை எதிர்கொண்டுதான் இருக்கிறது. வழிகாட்டும் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட போதிலும், ‘அடுத்த நொடி என் வாழ்வு எங்குச் செல்லப் போகிறது?’ என்ற ஆழமான தேடல் மனித மனங்களில் கூடிக்கொண்டே போகிறது. ‘வழிகாட்டிகள்’ என்று
தங்களை அறிவித்துக் கொள்ளும் முகமூடிகள் நம்மைச் சுற்றி ஏராளமாக இருந்தாலும், காயம்பட்ட நெஞ்சங்களைத் தேற்றி, தாங்கிப் பிடிக்கும் உண்மை மனிதரைக் காண்பது இன்று அரிதாகிவிட்டது. பல நூறு மனிதர்
கூடி வாழும் கூட்ட நெரிசலிலும், தனிமையின் ஏகாந்தக் கொடுமையையும், அலைக்கழிப்பையும் பலரும் அனுபவித்து வருகிறார்கள்.
‘நான்கு திசையும் பாதைகள்... நன்மை என்ன தீமை என்ன அறியாத கோலங்கள்’
என்ற பாடல் வரிகளுக்கேற்ப நாம் அலைக்கழிக்கப்பட்டு, சோர்ந்து போயிருக்கும் இந்த எதார்த்தமான தவிப்பின் பின்னணியில்தான் இன்றைய இறைவார்த்தை நம்மை நோக்கி ஒளிர்கிறது. அரவணைக்கும் நல்ல ஆயரின் பேரன்பை நோக்கி நம்மை வழி நடத்துகிறது.
இன்று
நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், தகுந்த தலைவர் அல்லது
வழிகாட்டி இல்லாத இறை மக்கள்மேல் இறைவன் கொண்டுள்ள பரிவுள்ளத்தையும், அதை வெளிப்படுத்த நமக்கு விடுக்கும் அழைப்பினையும் எடுத்துக்காட்டுகின்றன.
வாழ்வில்
திசையறியாமல், பாரங்களால் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து போயிருக்கும் ஒவ்வொரு மனிதரையும் தேடி ஓடிவரும் ஒரு நல்ல ஆயராகக் கடவுள் வெளிப்படுகிறார். நற்செய்தி வாசகத்தின் தொடக்க வரியான ‘திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்’ (மத்
9:36) என்பது, பழைய ஏற்பாட்டில் பாபிலோனிய நாடு கடத்தலின்போது இஸ்ரயேலர் நிலமற்று, தலைவனற்றுத் தவித்த நிலையை நினைவூட்டுகிறது.
இறைவாக்கினர்
மீக்கா அன்றைய மக்களின் பரிதாப நிலையை விவரிக்கும்போது, “இஸ்ரயேலர் அனைவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன்”
(1அர 22:17) என்கிறார். இவர்களின் அவலநிலையை இறைவாக்கினர் எசேக்கியேல் உருவகப்படுத்தும்போது, “ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்து, காட்டு விலங்குகளுக்கெல்லாம் இரையாயின. சிதறுண்டுபோன என் மந்தையைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்”
(எசே 34:5-6) என்று இறைவனிடம் தன் வேதனையைப் பதிவு செய்கிறார்.
இந்தத்
தவிப்புகளுக்கெல்லாம்
உன்னத விடையாக அமைவதுதான் இன்றைய முதல் வாசகம். இறைவன் இஸ்ரயேல் மக்களை நோக்கி, “கழுகுகளின் இறக்கைகளின்மேல் உங்களை ஏந்தி என்னிடம் வரச்செய்தேன்” (விப
19:4) என்று தமக்கே உரிய பேரன்பின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் பிற இனத்தாரின் தவறான மதிப்பீடுகளைப் பின்பற்றாமலும், சிலை வழிபாட்டிலும் தீயவழிகளில் வீழ்ந்துவிடாமலும், நீதியை நிலைநாட்டும் உண்மை மனிதராய் வாழவேண்டும் என்பதற்காகவே மோசே வழியாக அவர்களைத் தமது ‘தூய மக்களினமாக’ கடவுள்
அணைத்துக் கொள்கிறார். இதனால்தான் மோசே தன் ஆயுள் முடியும் தருவாயிலும், ஆண்டவரின் மக்கள் மேய்ப்பனில்லா ஆடுகளாய் அலைந்து திரியக்கூடாது என்ற பெருங் கவலையோடு கடவுளிடம் ஒரு நல்ல தலைவனுக்காக மன்றாடினார் (எண் 27:17).
பழைய ஏற்பாட்டில்
கழுகின் இறக்கைகளில் தாங்கி, மக்களைத் தூய குலமாக மாற்றிய அதே கடவுளின் கனிவான இதயம், புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் இயேசுவின் வழியாக மனித உருவெடுத்ததை நாம் காண்கிறோம்.
“இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார்... நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்” (மத்
9:35). இவ்வாறு இயேசு மக்களைத் தேடிச்சென்று நேரடியாகச் சந்தித்தபோதுதான் அவர்களின் துயரங்கள், வேதனைகள், ஆன்மிகப் போராட்டங்கள் மற்றும் அன்றாடத் தேவைகளை நேரில் காண்கிறார். அந்த எளிய, கதியற்ற மக்களின் வாழ்விற்குள் இயேசுவின் இதயத்தால் எளிதில் புகமுடிகிறது. அவர்கள் ஆயனற்ற ஆடுகள்போல் அலைக்கழிக்கப்படுவதை அவரால் கண்டுகொள்ள முடிகிறது.
அடுத்தவரின்
துன்பத்தை அறிவது என்பது, அவர்களின் துன்பநிலைக்குள் நாமும் புகாமல் சாத்தியமில்லை. பிறரது இயலாமையை அங்கீகரிப்பதன் மறுபக்கமே அவர்களுக்காகக் களத்தில் இறங்கிச் செயலாற்றுவதுதான். இயேசுவின் பரிவுள்ளம் வெறும் பரிதாபத்தோடு நின்றுவிடாமல் உடனடியாகச் செயலாற்றுகிறது. ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற ஆள்கள் தேவை என்பதை வெளிப்படையாக எடுத்துக்கூறி, பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்குப் பேய்களை ஓட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரமளித்து, “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” (மத்
10:8) என்ற கட்டளையோடு அலைக்கழிக்கப்படும் மக்களின் புதிய ஆயர்களாக அவர்களை உலகிற்குள் அனுப்புகிறார்.
புனித
பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், இந்த ஆயரின் பரிவை மனித அறிவுக்கு எட்டாத ஒரு மாபெரும் ஆன்மிக ஆழத்திற்கு எடுத்துச் செல்கிறார். நாம் தகுதியுள்ளவர்களாகவோ, தூய்மையானவர்களாகவோ இருந்தபோது கிறிஸ்து நமக்காக உயிர் கொடுக்கவில்லை; மாறாக, நாம் பாவிகளாய் திக்கற்று, கடவுளுக்கு எதிராக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்துத் தம் பேரன்பை எண்பித்தார். புனித பவுல் கூறுவது போல, “நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும், அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்” (உரோ
5:10). தடம் மாறி, திசைதெரியாமல் ஓடிய மனிதகுலத்தோடு கடவுள்தாமே முன்வந்து ஒப்புரவாவது என்பது, அவரது அளவிட முடியாத பரிவிரக்கத்தின் உச்சக்கட்ட அடையாளமாகும். இந்த மீட்பின் நற்செய்தியை அலைக்கழிக்கப்படும் அகில உலகிற்கும் அறிவிக்கவே தாம் திருத்தூதராக அழைப்புப் பெற்றுள்ளதாகவும் புனித பவுல் பெருமிதத்தோடு பறைசாற்றுகிறார்.
இன்று
நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆயரில்லா ஆடுகளைப்போல் தவிக்கும் ஆயிரமாயிரம் மக்கள்மீது பரிவிரக்கம் கொள்ளவும், அவர்களுக்காகப் பணியாற்றவும் உயிர்த்த இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். நம் இல்லங்களில் வாழும் குழந்தையரும் இளைஞரும் அலைக்கழிக்கப்படும் ஆடுகளாய் நம் முன்னே நிற்பதை நாம் காணவில்லையா? சமூக ஊடகங்களின் மாய உலகிற்குள் நம் சிறார் தஞ்சமடையும்போது, அங்கு அவர்களை நல்வழிப்படுத்த நல்மேய்ப்பர்கள் இல்லாததால், போலி வழிகாட்டிகளாலும், ஆபத்தான நீரோட்டங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கும், தவறான பழக்கவழக்கங்களுக்கும்
அடிமையாகி, உள்ளத்தாலும் உடலாலும் சோர்ந்து காணப்படுகின்றனர். எனவே, அலைக்கழிக்கப்படும் இந்தச் சமகால உலகிற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள்:
முதலாவதாக,
நல்ல ஆயனின் முதற்பணி திசையறியாது தவிக்கும் ஆடுகளுக்குக் கனிவான வழிகாட்டுவதே ஆகும். தடம்மாறி ஓடும் நம் குழந்தையருக்கு உண்மை நெறியைக் காட்டும் நல்வழிகாட்டிகளாக நாம் மாறவேண்டும். நம்முடைய முன்மாதிரியான வாழ்வாலும், கனிவான உடனிருப்பாலும் அவர்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதே இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது.
இரண்டாவதாக,
இயேசு தம் சீடர்களுக்குத் தந்த முதல் அதிகாரம் ‘நோய்களைக் குணமாக்குவது’ என்பதாகும்.
இன்று நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஏமாற்றங்களாலும் புறக்கணிப்புகளாலும் உள்ளத்தில் காயப்பட்டு நிற்கும் வேளையில், அலைக்கழிக்கப்படும் பிற மனிதரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடாமல், அவர்களின் மனக்காயங்களுக்கு அன்பெனும் அருமருந்திடும் ‘நலமாக்கும் கருவிகளாக’
நாம் மாற அழைக்கப்படுகிறோம்.
மூன்றாவதாக,
புனித பவுல் சுட்டிக்காட்டுவது போல, உண்மை அருள்பணி என்பது சுயநலமற்றத் தியாகத்தில் அடங்கியுள்ளது. நம் குடும்பத்தின் அமைதிக்காகவும், குழந்தையரின் உன்னதமான எதிர்காலத்திற்காகவும் நமது தேவையற்ற அகந்தை, கோபம் மற்றும் சுயநல விருப்பங்களைத் தியாகம் செய்யவேண்டும். பிறரின் வாழ்வு சிறந்து ஒளிரும் பொருட்டு, நம்முடைய நேரத்தையும் உழைப்பையும் கையளிக்க முன்வரவேண்டும்.
நிறைவாக,
இன்றைய இறைவார்த்தை நமக்குத் தரும் மாபெரும் ஆறுதல்: நம்மை உற்றுநோக்கும் ஓர் ஆயர் நமக்கிருக்கிறார்; அவர் நம் தவிப்பைக் காண்கிறார்; நம்மீது பரிவு கொள்கிறார்; நம்மைத் தேடி வருகிறார். அதேவேளையில், நம்மைச் சுற்றிலும் அலைக்கழிக்கப்படும் எண்ணற்ற மனிதருக்கு நாம் ‘உதவும் ஆயர்களாக’
மாறவும் அவர் நம்மைப் பணிக்கிறார். நமது பார்வைகள் பரிவிரக்கச் செயல்களாக மாறவேண்டுமெனில், நாமும் இயேசுவைப் போல நம் சமூகத்தை உற்றுநோக்கக் கற்றுக்கொள்வோம். ஆயரின் பரிவு நம் வழியாய் இந்த உலகிற்குச் சென்றடைய இறையருள் வேண்டுவோம்.