அநியாயத்தையும்
அதர்மத்தையும் பிடுங்கி எறியவும் தகர்க்கவும், சுரண்டலையும் மனிதத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தையும் அழிக்கவும் தகர்க்கவும், மறுபடியும் கடவுளின் உடன்படிக்கைச் சமுதாயத்தைக் கட்டவும் நடவும் இஸ்ரயேல் இறைவாக்கினர்கள் கடவுளின் குரலாக, தூதர்களாகத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். யாவே இறைவனின் அரசியல் ஆக்கப்பணியைப்போல, இறைவாக்கினரும் மக்களை உடன்படிக்கைச் சமுதாயத்தில் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட, அரசியல் ஆக்கப்பணியில் ஈடுபட்டார்கள். இறைவாக்கினருடைய நிலைப்பாடும், கடவுளுடைய திருவுளத்தின் அறிவிப்பும் அரசியலாக்கத்தின் வெளிப்பாடுகளாக இருப்பதை இறைவாக்கினர்களில் காண்கிறோம்.
அரசர்களைத் தேர்ந்தெடுத்து
திருப்பொழிவு
செய்த
இறைவாக்கினர்கள்
கடவுளின்
கட்டளைக்கு ஏற்ப இறைவாக்கினர்கள் அரசர்களைத் தேர்ந்தெடுத்துத் திருப்பொழிவு செய்தார்கள். சாமுவேல் இறைவாக்கினர் சவுல் என்பவரை இஸ்ரயேலின் முதல் அரசராக ஏற்படுத்தியபோது அவர் கூறியது: “ஆண்டவர் உன்னை மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்து இருக்கிறார்” (1சாமு
10:1). எல்லாருக்கும்
அரசராக இருக்கின்ற கடவுள் இந்தப் பெரிய பொறுப்பை மனிதருக்கும் கொடுத்து தமது சார்பாக ஆட்சி நடத்த அழைப்பு விடுக்கிறார்.
சவுல்
அரசன் கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாமல் சென்றபோது, அவனை ஆண்டவர் ஒதுக்கி விடுகிறார். எபிரோன் மக்களால் தாவீது கடவுளின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுகிறார் (2சாமு 2:4). அரசரைத் திருப்பொழிவு செய்யும் அரசியல் அதிகாரத்தைக் கடவுள் மக்களுக்கும் கொடுக்கிறார். அரசரைத் தேர்ந்து கொள்கின்ற உரிமையைக் கடவுள் சனநாயகப்படுத்திடும் அரசியலாக்கப் பணியில் ஈடுபடுகிறார். எனவே, அரசரை நியமிக்கும் பணியை இறைவாக்கினர்களுக்கும் மக்களுக்கும் கொடுப்பதன் வழியாக, மக்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும் அரசரைத் தேர்ந்து கொள்ளும் அரசியலாக்க அதிகாரத்தைத் தருகின்றார். அரசரைத் திருப்பொழிவு செய்யும் பழக்கம் சாலமோன் இறந்த பிறகும் தொடர்ந்தது (1சாமு 11:29-32).
அரசியல் ஆட்சியாளர்களை
வழிநடத்தும்
இறைவாக்கினர்கள்
யாவே
இறைவனின் அறிவுரையால் இறைவாக்கினர்கள் அரசர்களை வழிநடத்தினார்கள். சிரியா நாட்டு அரசன் இஸ்ரயேலைத் தாக்க முயற்சித்தபோது, பெயர் இல்லாத ஓர் இறைவாக்கினர் ஆகாபுக்கு அறிவுரை கூறி, இஸ்ரயேலைக் காப்பாற்றும் வழியைக் காண்பித்தார் (1அர 20:1-22). ஆகாப் கடவுளுடைய அறிவுரையை மீறினான் என்றால், அவன் அழிக்கப்படுவான் என்று இறைவாக்கினர் மீக்கா அறிவித்தார் (1அர 22:1-40).
இறைவாக்கினர்
எலிசா அரசியல் இராணுவக் காரியங்களில் நேரடியாக ஈடுபட்டார் (2அர 3:4-27). இஸ்ரயேல் உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு யோசியா, குல்தா என்ற இறைவாக்கினரைக் கலந்து ஆலோசித்தார் (2அர 22:8-20). இறைவாக்கினர்கள் அரசு அதிகாரத்திலே நேரடியாகப் பங்கு பெற்று, அரசர்களையும் ஆட்சியாளர்களையும் கடவுளுடைய ஒளியில் வழிநடத்தினர். நீதியுள்ள
அரசை உருவாக்கவேண்டும் என இறைவாக்கு உரைத்தனர்.
எனவே, அவர்களுடைய இறைவாக்குப் பணி அரசியலாக்க ஈடுபாடு நிறைந்ததாக இருந்தது.
ஆட்சியாளர்களுக்கும்
மக்களுக்கும்
எச்சரிக்கை
மணியடித்த
இறைவாக்கினர்கள்
காலப்போக்கில்
இஸ்ரயேல் வரலாற்றில் முடியாட்சி என்பது அநியாய அராஜகச் சுரண்டல் ஆட்சியாக மாறியது. எனவே, இறைவாக்கினர்கள் அரசர்களும் மக்களும் செய்கின்ற அநியாயங்களைச் சுட்டிக்காட்டவும், அவர்களது உடன்படிக்கை
மீறல்களைத் தட்டிக்கேட்கவும் செய்தனர். அவர்களை மறுபடியும் உடன்படிக்கை வாழ்விற்கு அழைக்கவும் செய்தனர்.
நாபோத்
என்பவரின் திராட்சைத் தோட்டத்தைத் தனது பேராசையால் அபகரித்த ஆகாப் மன்னனை எலியா இறைவாக்கினர் எச்சரித்துத் தீர்ப்பு வழங்கினார் ((1அர 21:19). தனது
அரசு அதிகாரத்தைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உரியாவின் மனைவி பத்சேபாவை அபகரித்ததோடு மட்டுமில்லாமல், அவருடைய கணவரையும் கொலை செய்த தாவீது, நாத்தான் இறைவாக்கினரால் எச்சரிக்கப்படுகிறார் (2சாமு 11:1-12).
இறைவாக்கினர்கள்
அரசர்களுக்கு அரசியல் ஆலோசகர்களாக, அறிவிப்பாளர்களாகச் செயல்பட்டனர். அநியாயம் செய்கின்ற மக்களையும் இறைவாக்கினர்கள் எச்சரித்து வழிநடத்தத் தவறவில்லை. யாவே கடவுளின் வழிபாட்டை மறுதலித்துவிட்டு, வேற்றுத் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டவரையும் (எரே 10, எசா 44), ஏழைகளைச்
சுரண்டியவர்களையும் (ஆமோ 2:6-9), ஆடம்பரமான அர்த்தமற்ற திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் (எசா 1:10-16, ஆமோ 5:21-23) நீதி மறுக்கப்படுவதையும் குறிப்பாக, ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் உரக்கச் சொல்லி எச்சரித்தார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் உரிய வாழ்வு வாழ இறைவாக்கினர்கள் இஸ்ரயேலரை மறுபடியும் சமத்துவம் நிறைந்த உடன்படிக்கைச் சமுதாயமாக மாறிடப் பணி செய்தார்கள்.
மக்களை
ஆட்சி செய்த அவர்களே மக்களின் ஆற்றல் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தபோது, இறைவாக்கினர்கள் அவர்களை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், கடவுளுடைய தீர்ப்பினையும் துணிச்சலோடு எதிரொலித்தார்கள். கடவுள் எவ்வாறு மக்களை ஆட்சி செய்கிறாரோ, அவ்வாறே ஆட்சி செய்ய மன்னர்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். மக்களும் கடவுளுக்குரிய நம்பிக்கையில் தவறியபோது, அவர்களும் எச்சரிக்கப்பட்டு, பலவகையான தண்டனைகளால் புதுப்பிக்கப்பட்டு உடன்படிக்கையின் மக்களாக மாற்றிட இறைவாக்கினர்கள் உழைத்தார்கள். இவையெல்லாம் இஸ்ரயேலர் ஆற்றல் பெற்றவர்களாக வாழ வேண்டும் எனும் அரசியல் ஈடுபாட்டின் செயல்பாடாக இருக்கின்றது.
அரசியல் ஈடுபாட்டிற்கான
கடவுளின்
அழைப்பு
கிறித்தவத்தின்
அழைப்பு
இன்றைய
கிறித்தவமும் இந்த இறைவாக்குப் பணியைத் தொடர அழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் இறைவாக்கினரோடும், இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலான இறைவாக்கினரான இயேசுவோடும் இணைந்து செயல்பட்டு, இறையாட்சிச் சமூகத்தைக் கடவுளின் சமூகமாகக் கட்டி எழுப்பி, எல்லாரையும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றிட அழைக்கப்படுகிறார்கள்.
இந்த
மாற்றம் வெறும் செபத்தாலும் தவத்தாலும் நடந்துவிடாது. மாறாக, அவற்றோடு தீர்க்கமான, தெளிவான அரசியல் ஈடுபாட்டோடு இந்திய அரசமைப்புச் சாசனம் காட்டுகின்ற விழுமியங்களைத் தூக்கிப் பிடித்து வாழ்வதால் நிகழும்.
அநீதிக்கும்
அதர்மத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்து, நம் நாட்டிலே நீதியும் சுதந்திரமும் விடுதலையும் சகோதரத்துவமும் மலர்ந்திட கிறித்தவர்கள் இறைவாக்கினர் குரலாகச் செயல்பட வேண்டும்.
நமது
சனநாயக உரிமையை எந்த அரசியல் ஆட்சியும் நம்மிடமிருந்து அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, நம்முடைய குடியுரிமை உரிமைகளையும், இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களையும் கட்டிக் காத்திட நமது அரசியல் ஈடுபாடு கட்டாயம் தேவை.
திருத்தந்தை
பிரான்சிஸ் கூறியதுபோல, “உங்களுடைய சக குடிமக்களின் மாண்பையும்
உரிமையையும் பாதுகாத்திட அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்;
பொதுப்பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; இதுதான்
அரசியல் ஈடுபாட்டின் முக்கிய நோக்கம்.”